பூன் லே வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புளோக் 214 பூன் லே பிளேசில் உள்ள அந்த வீட்டில் 79 வயதான ஆடவரின் உடல் மீட்கப்பட்டது. இந்த வீடு மாண்டவரின் சொந்த வீடு எனக் கூறப்பட்டது. கடைசியாக மூன்று நாள்களுக்கு முன் முதியவர் தனது அறைக்குள் செல்வதை வீட்டில் வாடகைக்கு இருப்பவர் பார்த்துள்ளார்.
சென்ற சனிக்கிழமை (ஆகஸ்ட் 13) மாலை அன்று வீடுக்கு திரும்பிய வீட்டு வாடகைக்காரர் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தார். கடந்த சில நாள்களாக வீட்டு உரிமையாளரை பார்க்கவில்லை என்பதால், அவர் உடனடியாக காவல் துறையினரை அழைத்துள்ளார்.
சம்பவ இடத்தை அடைந்த காவல் துறையினர் அழுகிய நிலையில் முதியவரின் உடலை அவரது அறையில் கண்டெடுத்தனர்.
முதியவர் வாழ்ந்த அறையில் ஒரு மேத்தையும், அறையின் ஒரு புறத்தில் துணிகள் குவிக்கப்பட்டிருந்ததாகவும் சின் மின் நாளிதழ் குறிப்பிட்டது.மெத்தையில் அதிக அளவில் ரத்தம் படிந்திருந்ததாகவும் கூறப்பட்டது. மாண்டவர் மெத்தையில் சாய்ந்துகொண்டிருந்தபோது மாண்டிருக்ககூடும் என நம்பப்படுகிறது.
வீட்டு உரிமையாளரான முதியவரும் வாடகைக்காரரும் தவிர அந்த வீட்டில் வேறு யாரும் வசிக்கவில்லை எனக் கூறப்பட்டது.
முதியவரின் மரணம் இயற்கைக்கு மாறானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது.