இர்ஷாத் முஹம்மது
சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள தேசிய நினைவுச் சின்னமான ஸ்ரீ மாரியம்மன் கோயில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று குடமுழுக்கு விழாவை நடத்தவுள்ளது.
ஏறத்தாழ 3 மில்லியன் வெள்ளி செலவில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்துவரும் வேளையில் நேற்று இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குடமுழுக்கு விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோயிலின் குடமுழுக்கு நடந்தேறியது. 1827ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் சிங்கப்பூரின் ஆகப் பழமையான கோயிலாகவும் ஆகப் பழமையான வழிபாட்டுத் தலமாகவும் திகழ்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் பட்சத்தில் இவ்வாண்டு மத்தியில் அதை நடத்த முடிவுசெய்யப்பட்டதாகவும் கொவிட்-19 காரணமாக சீரமைப்புப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு 2023ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடக்க ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும் தெரிவித்தார் கோயிலின் தலைவர் திரு சீ. லக்ஷ்மணன், 63.
"இந்தப் பணிகளுக்காக இந்தியாவின் சிற்பக் கலை வல்லுநர்கள் 12 பேரை வரவழைத்துள்ளோம். கட்டுமானம் சார்ந்த வேலைகளுக்கு உள்ளூர் நிறுவனத்தை நாடியுள்ளோம். இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் வேலைகள் நடந்துவருகின்றன," என்றார் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கோயில் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று சேவையாற்றிவரும் அவர்.
"சிற்பங்களில் உள்ள வண்ணங்கள் நன்கு சுரண்டப்பட்டு புதுப்பொலிவுடன் வண்ணம் பூசும் பணிகள் நடக்கின்றன. அக்டோபர் மாதம் தீமிதித் திருவிழா நடந்தவுடன் சாமி சிலைகள் கோயிலுக்குள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு இதர வேலைகளும் நடக்கவுள்ளன. வழிபாட்டாளர்களுக்கு எந்த இடையூறும் நேராத வண்ணம் இந்தப் பணிகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்," என்றார் அவர்.