புதிதாகத் தயாரிக்கப்படும் பானங்களில் ஊட்டச்சத்து விவரங்களை வெளியிடுவது கட்டாயம் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் இதனை நடைமுறைப்படுத்தவும் சிறிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்தும் பரிசீலிப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நடைமுறைச் சாத்தியம் உள்ள வகையில் இவை அமலாக்கப்படும் என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து நிறுவனங்களும் தங்கள் பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருள்களில் உள்ள சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றின் அளவை ஆய்வுக்கூடங்களில் சோதித்து வெளியிட வேண்டும் என்பதில்லை. பானங்களில் சேர்க்கப்படும் பொருள்களின் அடிப்படையில் அவற்றை உத்தேசமாக மதிப்பிட்டும் குறிப்பிடலாம் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
அடுத்து வரும் மாதங்களில் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிதாகத் தயாரிக்கப்படும் பானங்களில் உள்ள சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றின் அளவை வெளியிடுவது கட்டாயம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இம்மாதம் 11ஆம் தேதி தெரிவித்தார்.
காப்பி, பழச்சாறுகள், பபிள் டீ போன்றவற்றிற்கும் இது பொருந்தும் எனக் கூறப்பட்டது.

