சிங்கப்பூரின் புறநகர்ப் பகுதிகளில் புதிதாகக் கட்டப்படும் தனியார் கூட்டுரிமை வீடுகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்ததால், சென்ற மாதம் விற்பனையான வீடுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் சில புதிய கூட்டுரிமை வீடுகளின் இடைநிலை விலை, நகரின் முக்கிய இடங்களில் அமைந்துள்ள வீடுகளின் விலைக்கு ஈடாக உயர்ந்தது.
அங் மோ கியோ அவென்யூ 1ல் கட்டப்படும் 'ஏஎம்ஓ ரெசிடென்ஸ்' கூட்டுரிமை வீட்டின் 372 வீடுகள் சென்ற மாதம் விற்பனைக்கு வந்தன. அவற்றில் 366 வீடுகள் விற்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்ற மாதம் விற்பனை செய்யப்பட்ட மொத்தம் 485 வீடுகளில் இது 58.2 விழுக்காடு.
சென்ற மாதம் புறநகர்ப் பகுதிகளில் விற்பனையான புதிய தனியார் வீடுகளின் இடைநிலை விலை, ஒரு சதுர அடிக்கு 2,088 வெள்ளி. ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது ஏறத்தாழ 19 விழுக்காடு அதிகம் என்று நகர மறுசீரமைப்பு ஆணையப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
'ஏஎம்ஓ ரெசிடென்ஸ்' கூட்டுரிமை வீடுகள் ஒரு சதுர அடிக்கு 2,110 வெள்ளி என்ற விலையில் விற்கப்பட்டன.
ஒப்புநோக்க, நகரின் முக்கியப் பகுதிகளில் தனியார் வீடுகளின் விலை ஒரு சதுர அடிக்கு 2,741 வெள்ளியாகவும் நகர்ப்புற எல்லைகளில் 2,323 வெள்ளியாகவும் இருந்தது.
'எக்ஸகியூட்டிவ்' கூட்டுரிமை வீடுகளையும் சேர்த்து ஜூலையில் மொத்தம் 846 புதிய வீடுகள் விற்பனையாயின. ஜூன் மாதத்தைவிட இது 70.6 விழுக்காடு அதிகம் என்று கூறப்பட்டது.