சிங்கப்பூர் ஆயுதப் படைகள் முதல்முறையாக 13 நாடுகள் பங்குபெற்ற சிறப்பு ராணுவப் பயிற்சியில் கலந்துகொண்டதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
'எக்சர்சைஸ் சூப்பர் கருடா ஷீல்டு' எனும் பயிற்சி இந்தோனீசியாவில் இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து 14ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தகைய பயிற்சி இடம்பெறுவது இது முதல்முறை என்று அமைச்சு குறிப்பிட்டது.
இந்தோனீசிய தேசியத் தற்காப்புப் படைகளும் அமெரிக்க-இந்தோ பசிபிக் தளபத்தியமும் 'எக்சர்சைஸ் கருடா ஷீல்டு' எனும் இருதரப்பு வருடாந்தரப் பயிற்சியை நடத்துவது வழக்கம்.
இம்முறை விரிவுபடுத்தப்பட்ட பலதரப்புப் பயிற்சியில் நியூசிலாந்து, பிரான்ஸ், மலேசியா, இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டன.
பங்கேற்ற நாடுகளின் ஆயுதப்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த உதவிய இந்தப் பயிற்சியில், நாலாயிரத்துக்கும் அதிகமான படை வீரர்கள், தளவாடங்களுடன் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.