பேருந்து, ரயில் கட்டணங்களை கணக்கிடும் முறையை பொதுப் போக்குவரத்து மன்றம் பரிசீலிக்கவிருக்கிறது.
அதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் முடிவடையும் என்று மன்றம் நேற்று தெரிவித்தது.
பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களைக் கணக்கிடும் முறையில் ஏதாவது மாற்றம் செய்யப் பட்டால் அது, 2023ஆம் ஆண்டின் கட்டண மறுபரிசீலனையின்போது நடப்புக்கு வரும்.
பொதுப் போக்குவரத்து பயணிகள், பொதுப் போக்குவரத்து நடத்து நர்கள், தொழிற்சங்க இயக்கம், போக்குவரத்து நிபுணர்கள் ஆகியோரின் கருத்துகள் இதன் தொடர் பில் அறியப்படும்.
ஆனால் இவ்வாண்டு பிற்பகுதி யில் கட்டணம் பரிசீலிக்கப்படும்போது தற்போதுள்ள முறையே பின்பற்றப்படும் என்று மன்றம் குறிப்பிட்டது.
ஒவ்வோர் ஆண்டும் எந்த அளவுக்கு பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தைச் சரி செய்யலாம் என்பதற்கு தற்போதைய கணக்கிடும் முறையில் வரம்பு உள்ளது.
இது, ஐந்து அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது.
பணவீக்கம், எரிபொருள் விலை, சம்பள உயர்வு, உற்பத்தித்திறன் மற்றும் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு ஆற்றல் ஆகியவை அவை.
பொதுப்போக்குவரத்துக் கட்டணங்களைக் கணக்கிடும் முறை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசீலிக்கப்படுவதாக நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஜேனட் ஆங் தலைமையிலான பொதுப் போக்குவரத்து மன்றம் நேற்று தெரிவித்தது.
இந்த மன்றத்தில் கல்வி நிறுவனங்கள், வர்த்தகம், அடித்தள அமைப்புகள், தொழிற்சங்கங்கள், நிபுணத்துவ சேவைகள் ஆகியவற்றைப் பிரதிநிதிக்கும் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களை, போக்குவரத்து அமைச்சு நியமிக்கிறது.
2018ல் பொதுப் போக்குவரத்து கட்டணங்களைக் கணக்கிடும் முறை கடைசியாக பரிசீலிக்கப் பட்டது. அப்போது, கட்டமைப்பு ஆற்றல் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
பொதுப் போக்குவரத்து நடத்து நர்களின் நடத்தும் செலவுகள் இடம் பெறும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது.
பொதுப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பயணங்கள் இம்முறை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று மன்றம் மேலும் கூறியது.
பொதுப் போக்குவரத்து மன்றத் தின் முன்னாள் தலைவரான ரிச்சர்ட் மேக்னஸ், மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது அதிகரித்துள்ளதால் பொதுப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கடந்த ஆண்டு சுட்டிக்காட்டியிருந்தார்.
கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து பயணங்கள் கொள்ளைநோய்க்கு முந்தைய நிலையுடன் ஒப்பிட்டால் 25 விழுக்காடு குறைந்தது.
கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட பிறகு பயணங்கள் எண்ணிக்கை கூடியது. இருந்தாலும் கொள்ளை நோய்க்கு முந்தைய நிலையை அது இன்னமும் எட்டவில்லை.

