ஊழியர் பற்றாக்குறை நிலவும் சிங்கப்பூரில் தானியக்கமும் இயந்திர மனிதக் கருவிகளும் அவசியமாகின்றன. இதன் காரணமாகவே இயந்திர மனிதத் தொழில்நுட்பத்தை மேம்படுத்து வதில் சிங்கப்பூர் கவனம் செலுத்துகிறது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று தெரிவித்தார்.
இயந்திரவியல் துறையில் அதிகரித்து வரும் வாய்ப்புகளை ஆய்வாளர்கள், நிறுவனங்கள், ஊழியர்கள் ஆகிய முத்தரப்பினரும் கைப்பற்றலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தில் 45 மில்லியன் செலவில் இதற்கான புதிய ஆய்வு நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
நவீன இயந்திர மனித தொழில்நுட்பப் புத்தாக்க நிலையம் என்று அழைக்கப்படும் நிலையத்தில் தளவாடம், உற்பத்தித் துறை, முதியோர் பராமரிப்பு ஆகிய துறைகளில் தேவைப்படும் இயந்திர மனிதர்களை உருவாக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
அரசாங்கம், அதன் ஆய்வு, மேம்பாட்டுத் துறையில் இயந்திரவியல் தொடர்பான ஆய்வுக்கு தேசிய முன்னுரிமை அளித்து வருவதை அமைச்சர் டான் எடுத்துரைத்தார். ஆராய்ச்சியாளர்கள் தொழில்துறையில் பயன்படுத்தக்கூடிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படக்கூடிய திட்டங்களை உருவாக்குவது முக்கியம் என்று என்றார் அவர்.
இது, நமது நிறுவனங்கள் உருமாற்றப்பட்ட பொருட்களையும் சேவைகளையும் உருவாக்க பேருதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

