வழக்கறிஞர்களுக்கான சட்டத் தேர்வில் ஏமாற்றிய ஆறு பயிற்சி வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் களாக தங்களை அனுமதிக்கக் கோரும் விண்ணப்பங்களை மீட்டுக் கொண்டுள்ளனர்.
திருவாட்டி மோனிஷா தேவராஜ், திரு குஷல் அடுல் ஷா, திரு ஸ்ரீராம் ரவீந்திரன், திருவாட்டி லின் குவெக் யி டிங், திரு மாத்திவ் சோவ் ஜுன் ஃபெங், திரு லயனல் வோங் சூங் யூங் ஆகிய ஆறு பேர் இம்முடிவை எடுத்துள்ளனர். ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை அவர்களுடைய விண்ணப்பங்களை நிறுத்தி வைப்பதாகக் கூறிய நீதிபதி சூ ஹான் டெக் முன்பு அவர்கள் முன்னிலையாகினர். அப்போது பேசிய அவர்களுடைய வழக்கறிஞர்கள், தங்களை வழக்கறிஞர்களாக அனுமதிக்க தகுதியானவர்கள் என்பதைக் காட்ட ஒத்திவைக்கப்பட்ட காலம் போதுமானதாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர் என்றார்.
அவர்களில் மூவரைப் பிரதி நிதிக்கும் மூத்த வழக்கறிஞரான என். ஸ்ரீனிவாசன், திரு லியோன் டே குவான் லி சம்பவத்தில் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் எடுத்துள்ள முடிவிலிருந்து வழிகாட்டுதலை தமது கட்சிக்காரர்கள் பின்பற்றுவதாகத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் அல்லது வேறு எந்த இடத்திலும் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக்கூடாது என்ற நிபந்தனையின்கீழ் திரு டே தமது விண்ணப்பங்களை மீட்டுக்கொள்ள கடந்த மே மாதத்தில் தலைமை நீதிபதி மேனன் அனுமதித்திருந்தார். இதை தமது கட்சிக்காரர்கள் பின்பற்றி புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மாட்டார்கள் என்றார் திரு ஸ்ரீனிவாசன். திரு சோவை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் லோ சாய் சோங்கும் இதையே எதிரொலித்தார்.
2020ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற வழக்கறிஞர்களுக்கான பகுதி 'பி' தேர்வில் ஏமாற்றிய 11 வழக்கறிஞர்களில் இவர்கள் ஆறு பேரும் அடங்குவர். திருவாட்டி மோனிஷா, திரு ஷா, திரு ஸ்ரீராம், திரு சோவ், திரு வோங் ஆகியோர் தங்களுடைய விடைத்தாள்களை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்துகொண்டனர்.
திரு குவேக் தன் மீதான குற்றச் சாட்டை மறுத்தார். ஆனால் அவரது விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. மூன்று தாள்களில் அவர் மற்றவருடன் கூட்டு சேர்ந்து ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து வழக்கறிஞர்களும் இனி ஆறு தாள்களில் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.
திரு குவேக் முழுத் தேர்வையும் மீண்டும் செய்ய வேண்டும்.

