சிங்கப்பூரின் பிரதமராக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் எப்போது பதவி ஏற்பார் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இருப்பினும் அவரை அந்தப் பதவிக்குத் தயார்ப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் நேற்று முன்தினம் பேசிய திரு வோங், தலைமைத்துவம் மாற்றம் தொடர்பாக இரண்டு சாத்தியக்கூறுகளைப் பட்டியலிட்டார்.
முதலாவது, அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னரே திரு வோங் பிரதமர் பொறுப்பை ஏற்கக்கூடும். 2025 நவம்பர் மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு தாம் பிரதமர் பொறுப்பை ஏற்றால், மக்கள் செயல் கட்சிையயும் 4ஜி தலைவர்கள் எனப்படும் நான்காம் தலைமுறை அரசியல் தலைவர்களையும் 2025 தேர்தலுக்கு தம்மால் 'தெளிவாக வழிநடத்த' முடியும் என்றார் திரு வோங்.
இரண்டாவது சாத்தியக்கூறு, பிரதமர் லீ சியன் லூங் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடித்து அடுத்த பொதுத் தேர்தலை வழிநடத்தக்கூடும் என்றும் தேர்தலில் மசெக வென்றால் அதன் பின்னர் அவர் பிரதமர் பொறுப்பை தம்மிடம் ஒப்
படைக்கக்கூடும் என்றும் திரு வோங் தெரிவித்தார்.
"இந்த இரண்டு தெரிவுகள் உள்ளபோதிலும் தலைமைத்துவ மாற்றம் எப்போது நிகழும் என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை," என்றார் அவர்.
சிங்கப்பூரின் தலைவர்கள் குழுவை அமைப்பது பற்றியும் விரிவாக்கப்பட்டுள்ள தமது பொறுப்பை நன்கு பழக்கப்படுத்திக்கொள்வது பற்றியும் சிந்திப்பதே இப்போதைக்கு மிகவும் முக்கியமானது என்றும் திரு வோங் தெரிவித்தார்.
நிதி அமைச்சராகவும் உள்ள அவர் கடந்த ஜூன் மாதம் துணைப் பிரதமராகப் பதவி உயர்த்தப்பட்டார். பிரதமர் லீ நாட்டில் இல்லாதபோது தற்காலிகப் பிரதமர் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டு வருகிறது.
அத்துடன், பிரதமர் அலுவலகத்தின்கீழ் செயல்படும் உத்தி வகுக்கும் குழுவுக்கும் அவர் பொறுப்பு வகிக்கிறார். மற்றொரு துணைப் பிரதமரான ஹெங் சுவீ கியட்டிடம் இருந்து இந்தப் பொறுப்பு திரு வோங்கிற்கு அளிக்கப்பட்டு உள்ளது.
லாரன்ஸ் வோங் எப்போது பிரதமர் ஆவார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை

