ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றமென வகைப்படுத்தும் சட்டப் பிரிவு 377ஏ தொடர்பான விவகாரம் பரந்த சமூக அக்கறைக்கு உரியது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
சட்டம் தொடர்பாகவும் ஓரினப் பாலுறவு நடத்தையை குற்றமாக்குவது தொடர்பாகவும் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ள நிலையில், 377ஏ சட்டப் பிரிவை ரத்து செய்வது, குடும்பம், திருமணம் என்பனவற்றைச் சுற்றி உருவான சமூகத்தின் நற்பண்புகளைத் திசைதிருப்பிவிடுமோ என்பதே பெரும்பாலான மக்களின் அக்கறையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், முன்னோக்கிய பாதையில் பிரிவினையைப் பெரிதாக்காமல் ஒருமித்த கருத்தை எட்ட பல்வேறு குழுக்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்ற சிங்கப்பூரின் நடைமுறை பரிசீலனையில் உள்ளது என்றார் திரு வோங்.
ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றமென வகைப்படுத்தும் 377ஏ சட்டப் பிரிவு எப்போது நீக்கப்படும் என்று புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் ஜான் மிக்கல்த்வெய்ட் கேட்டதற்கு துணைப் பிரதமர் வோங் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
திரு வோங்கை, 'நவீன மனிதர்' என்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற பரந்தமனம் கொண்டவர் என்றும் வர்ணித்த திரு மிக்கல்த்வெய்ட், "சிங்கப்பூருக்கு மக்களை வரவழைக்க முயலும்போது இதுபோன்ற சட்டப்பிரிவைக் கொண்டிருப்பது பெரிய தர்மசங்கடத்தை உருவாக்குவதாக இருக்கும்," என்றார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய நிதி அமைச்சருமான திரு வோங், "சட்டங்கள் பிரிட்டிஷ் காலனித்துவ காலம்தொட்டு இருந்து வருபவை என்பது நன்கு புரிந்துகொள்ளக்கூடியது.
"ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனிகளாக இருந்த பல ஆசிய நாடுகள் இதனை காலப்போக்கில் ரத்து செய்திருப்பதை அரசாங்கம் தெரிந்துவைத்துள்ளது,
"ஆயினும், சிங்கப்பூரில் பல்வேறு தரப்பினர் இந்த விவகாரம் வெறும் சட்டம் தொடர்பானது மட்டுமல்ல என்றும் சமூகம், அதன் நற்பண்புகள், திருமணம், குடும்பம் ஆகியன சம்பந்தப்பட்டது என்றும் தெரிவிக்கின்றனர்," என்றார்.
ஓரின பாலுறவுக்காக ஆண்
களைத் தண்டிக்க சட்டப்பிரிவு 377ஏ பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்கு ஆதரவாக சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்து இருந்தது.
இம்மாதத் தொடக்கப் பகுதியில் சிங்கப்பூருக்கு வந்த அமெரிக்க மக்களவை நாயகர் நேன்சி பெலோசி, இந்த விவகாரம் குறித்துப் பேசியதை திரு வோங்குடனான நேர்காணலின்போது திரு மிக்கல்த்வெய்ட் நினைவூட்டினார்.
சிங்கப்பூரில் 'எல்ஜிபிடிக்யூ' சமூகத்தை ஆதரிக்குமாறு வர்த்தகக் குழுக்களை அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், சட்டப்பிரிவு 377ஏ நீக்கப்பட வேண்டுமா என்பது சிங்கப்பூரும் சிங்கப்பூரர்களும் முடிவு செய்ய வேண்டியது என்று குறிப்பிட்ட துணைப் பிரதமர் வோங், இப்படித்தான் காலம் காலமாக சிங்கப்பூர் வலியுறுத்தி வந்துள்ளது என்றும் இப்போதும் அதே நிலைதான் என்றும் கூறினார்.

