கடலடி அச்சுறுத்தல்களை இணைந்து முறியடிக்கும் திறனை மேம்படுத்தும் நோக்குடன் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் ஆறு நாள் இருதரப்பு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன.
இரு நாடுகளின் கடற்படை
களையும் சேர்ந்த 230க்கும் மேற்பட்ட தேசிய சேவையாளர்கள் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டனர்.
'ஜாய்ண்ட் மினெக்ஸ் பாண்டு' என்னும் பெயரிலான கூட்டுப் பயிற்சி கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) சாங்கி கடற்படைத் தளத்தில் தொடங்கியது.
சிங்கப்பூரின் கடல் நீரிலும் இந்தோனீசியாவின் பாத்தாம், பிந்தான் கடல் நீரிலும் நடத்தப்பட்டு வந்த பயிற்சி நேற்றுடன் நிறைவுபெற்றது.
கடலடி கண்ணிவெடியைக் கூட்டாகக் கண்டுபிடித்து முறியடிக்கும் நடவடிக்கைகள், முக்குளித்தல் மற்றும் கப்பலிலிருந்து அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் நடவடிக்கைகள், உண்மையான துப்பாக்கிச்சூடு நடத்தி பயிற்சி செய்தல், கண்ணிவெடி வேட்டை மற்றும் முக்குளித்தல் திறன்கள் தொடர்பான நிபுணத்துவப் பரிமாற்றம் போன்றவற்றில் இருநாட்டுப் படையினரும் ஈடுபட்டனர்.
ஆர்எஸ்எஸ் பொங்கோல், ஆர்எஸ்எஸ் பிடோக் என்னும் சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் கண்ணிவெடி முறியடிப்புக் கப்பல்கள் இரண்டும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
கடற்படையின் முக்குளிப்புப் பிரிவின் படையினரும் இதில் பங்கேற்றனர். அதேபோல இந்தோனீசிய கடற்படையும் இரண்டு கப்பல்களையும் முக்குளிப்புப் படையினரையும் பயிற்சியில் ஈடுபடுத்தியது.
சிங்கப்பூர், இந்தோனீசிய கடற்
படைகள் பலதரப்பட்ட மலாக்கா நீரிணை சுற்றுக்காவலில் ஒன்றோடொன்று ஒத்துழைத்ததாகவும் அச்சுறுத்தல் முறியடிப்பு தொடர்பான நிபுணத்துவ பரிமாற்றங்களைச் செய்துகொண்டதாகவும் சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சு நேற்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.
மேலும், இந்தக் கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகள் சிங்கப்பூர், இந்தோனீசியாவுக்கு இடையிலான நீண்டகால, அணுக்க தற்காப்பு உறவுகளை எடுத்துக்காட்டுவதாகவும் அமைச்சின் அறிக்கை தெரி வித்தது.

