எச்எஸ்பிசி ஆய்வு: 2030ல் அமெரிக்கா, சீனாவை விஞ்சிவிடும்
மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால், அடுத்த எட்டாண்டுகளில் அமெரிக்கா, சீனா அல்லது ஆசிய பசிபிக் வட்டாரத்திலுள்ள எந்தவொரு நாட்டைக் காட்டிலும் சிங்கப்பூரில் அதிகச் செல்வந்தர்கள் இருப்பர் என்று எச்எஸ்பிசி வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் உள்ள பெரியவர்களில் 7.5 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (S$1.38 மி.) சொத்து மதிப்பைக் கொண்டிருந்தனர். இவ்விகிதம் 2025ஆம் ஆண்டில் 9.8 விழுக்காடாகவும் 2030ஆம் ஆண்டில் 13.4 விழுக்காடாகவும் உயரும் என்று எச்எஸ்பிசி ஆய்வறிக்கை கூறுகிறது.
குடிமக்கள், நிரந்தரவாசிகள் என உள்ளூர்வாசிகள் மட்டும் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.
வங்கிக் கணக்குகளில் உள்ள ரொக்கம், பங்குகள், முறிகள் போன்ற முதலீட்டுப் பத்திரங்கள், அசையாச் சொத்துகள், செலுத்த வேண்டிய கடன் ஆகியவற்றைக் கொண்டு, செல்வந்தர் ஒருவரின் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டதாக எச்எஸ்பிசி வங்கி விளக்கியது.
மக்கள்தொகை அடிப்படையில், ஆசியாவில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக அதிகச் செல்வந்தர்கள் இருப்பது சிங்கப்பூரில்தான். ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு எட்டு விழுக்காட்டினர் செல்வந்தர்களாக இருந்தனர்.
ஆயினும், 2030ல் 12.5 விழுக்காட்டுடன் ஆஸ்திரேலியா இரண்டாம் நிலைக்கு இறங்கிவிடும் என்று எச்எஸ்பிசி கணித்துள்ளது.
அவ்வாண்டில் ஹாங்காங்கில் 11.1 விழுக்காட்டினரும் அமெரிக்காவில் 9 விழுக்காட்டினரும் ஜப்பானில் 7.2 விழுக்காட்டினரும் சீனாவில் 4.4 விழுக்காட்டினரும் செல்வந்தர்களாக இருப்பர்.
குறைந்தது 250,000 அமெரிக்க டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ள சிங்கப்பூர்வாசிகளின் விகிதம் 2030ஆம் ஆண்டில் 67 விழுக்காடாக உயரும் என்றும் அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
அத்துடன், ஆசியாவில் 2030க்குப் பிறகும் செல்வந்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்றும் 2035ல் சிங்கப்பூரில் 17 விழுக்காட்டினரும் ஆஸ்திரேலியாவில் 15.1 விழுக்காட்டினரும் செல்வந்தர்களாக இருப்பர் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

