உற்பத்தித் துறையில் நீடித்த நிலைத்தன்மையை அதிகரிப்பதற்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. எச்பி கணினி நிறுவனமும் எஸ்ஐஎம் எனப்படும் சிங்கப்பூர் நிர்வாகக் கழகமும் இணைந்து அடுத்த மாதம் அந்தப் பயிற்சி வகுப்பு களைத் தொடங்கும்.
சிங்கப்பூரின் 2030 பசுமைத் திட்டத்துக்கு புதிய பயிற்சி வகுப்புகள் உதவும் என்று எஸ்ஐஎம் நேற்று கூறியது. நீடித்த நிலைத்தன்மைமிக்க மேம்பாட்டை முன்னெடுப்பது தேசிய இயக்கமான 2030 சிங்கப்பூர் பசுமைத் திட்டத்தின் நோக்கமாகும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 15 பயிற்சி வகுப்புத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். அவற்றின் மூலம் 180 நிறுவனங்களைச் சேர்ந்த 1,500க்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள். பயிற்சி வகுப்புகள் இரண்டிலிருந்து நான்கு நாள்கள் வரை நடத்தப்படும்.
வடிவமைப்பு சிந்தனையின் மூலம் மின்னிலக்க உருமாற்றம், பசுமை வடிவமைப்பு நடைமுறைகள் போன்ற தலைப்புகளில் பாடம் எடுக்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள், மைஸ்கில்ஸ்ஃபியூச்சர், எஸ்ஐஎம் இணையத்தளங்களுக்குச் சென்று பயிற்சிக்குப் பதிவு செய்துகொள்ள லாம்.
தெலுக் பிளாங்காவில் உள்ள எச்பி நிறுவனத்தின் வளாகத்தில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர், எஸ்ஐஎம் அமைப்புகளும் எச்பி நிறுவனமும் பயிற்சி வகுப்புகள் பற்றிய புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன. அதன்படி, உற்பத்தி துறையில் உள்ள சிறிய நடுத்தர நிறுவனங் களுக்குப் பயிற்சி வழங்க ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பு தேர்வு செய்த 'ராணித்தேனீ' அமைப்பாக எச்பி நிறுவனம் செயல்படும்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பு தொழில்துறையில் முன்னணி வகிக்கும் இத்தகைய 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களை 'ராணித் தேனீ' நிறுவனங்களாக நியமித்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த தொழில்நுட்பப் பெருநிறுவனமான சீமன்ஸ் நிறுவனமும் அவற்றில் ஒன்றாகும்.
தொழில்துறையில் இருக்கும் முன்னணிநிலை, வர்த்தகத் தொடர்புகளில் மற்ற நிறுவனங்களின்மீது செல்வாக்கு செலுத்தும் ஆற்றல் போன்றவற்றைக் கொண்டு 'ராணி தேனீ' நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
மற்ற நிறுவனங்களுக்கு உதவும் புதிய திறன்களைப் பற்றிய தகவல்களை எச்பி போன்ற முன்னணி தொழில்துறை நிறுவனங்கள் அளிக்கும் என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பின் தலைமை நிர்வாகி டான் கொக் யாம் கூறினார்.

