உலகளாவிய பொருளியலில்
கரிமம் அறவே இல்லாத நிலையை உருவாக்கினால் அது பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஊழியர் சந்தையில் பெருமளவிலான பின்னடைவுகளை உண்டாக்கும் என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர்
ரவி மேனன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பசுமைப்
பொருளியலுக்கு மாறுவது முறையானதாக இருந்தால் பணவீக்கமும் ஊழியர் சந்தையில் ஏற்படும் இடையூறுகளும் சமாளிக்கக்கூடிய அளவில் இருக்கும் என்றார் அவர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற சிங்கப்பூர் பொருளியல் மன்றத்தின் வருடாந்திர விழாவில் கூடியிருந்தோரிடம் திரு ரவி பேசினார்.
திரு ரவிக்கு கொவிட்-19
கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் இணையம் மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பசுமைப் பொருளியலுக்கு முறையான வகையில் மாறினாலும்
கரிமம் அறவே இல்லாத இலக்கை அடைய, வரிகள் உயர்த்தப்படும்போது பணவீக்கம் உயரும் என்று திரு ரவி எச்சரித்தார்.
"கரிமத்தின் விலை நியாயமானதாக இருந்தால் அது பொருளியல் ரீதியாக வலுவான சமிக்ஞைகளை அனுப்பிவைக்கும்.
"கரிமத்தை அதிகம் கொண்டுள்ள பொருள்கள், சேவைகள் ஆகியவற்றுக்கான தேவையைக் குறைத்துக்கொள்ள பயனீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுவர்.
"அதுமட்டுமல்லாது, குறைந்த கரிமத் தொழில்நுட்பங்களுக்கு மாறவும் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். குறைந்த கரிம அளவைக் கொண்ட பொருள்களைக் கண்டு பிடித்து உற்பத்தி செய்யும் முனைப்பை ஏற்படுத்தும். இத்
தகைய பொருள்கள் தொடர்பாக மூதலீடு செய்து வர்த்தகத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதி
கரிக்கும்," என்று திரு ரவி தெரிவித்தார்.
இருப்பினும், எரிபொருள் விலை அதிகரிப்பால் பல பொருள்களின் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் அதன் விளைவாக ஒட்டுமொத்த அடிப் படையில் விலை ஏற்றமும் ஏற்படும் என்றார் அவர்.
"முன்பைவிட பணவீக்கம் அதிகரிக்கும் என நினைக்கிறேன்," என்று திரு ரவி கூறினார்.
கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட நிலையை அவர் சுட்டினார். அப்போது பணவீக்கம் மிகவும் குறைவாக இருந்தது. அதனால் பெரிய பணக்கார நாடுகளின் மத்திய வங்கிகள் அவற்றின் வட்டி விகிதத்தைக் கிட்டத்தட்ட பூஜ்யத்துக்குக் குறைத்தன. சிங்கப்பூரில் கடந்த பத்தாண்டுகளில் பயனீட்டாளர் விலைக் குறியீடு சராசரியாக 1.5 விழுக்காடு உயர்ந்து வந்துள்ளது என்றார் அவர்.
ஆனால் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பணவீக்கம் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் கடந்த பத்து ஆண்டுகள் இல்லாத அளவில் 6.7 விழுக்காடாகப் பதிவாகி புதிய உச்சத்தை எட்டியது.
கடந்த மாதம் பிரிட்டனில் பணவீக்கம் 10.1 விழுக்காடாகப் பதிவாகி கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியது.
கரிமத்தை அதிகம் பயன்படுத்தும் துறைகளில் பலர் வேலை இழப்பர் என்று கூறிய திரு ரவி, கரிமம் தொடர்பாக நடுநிலையுடன் இருக்கும் துறைகளில் புதிய வேலைகள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.