சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள 'டிஎஃப்ஐ' குழுமம் அடுத்த ஈராண்டில் சிங்கப்பூரில் உள்ள வசதிகுறைந்தோருக்கு ஒரு மில்லியன் உணவுப் பொட்டலங்களை இலவசமாக வழங்கத் திட்டமிட்டு உள்ளது.
பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்துள்ள நேரத்தில் இது பொருத்தமான முயற்சியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதன் தொடர்பில் சிங்கப்பூர் உணவு வங்கியுடன் இணைந்து 'சாப்பிட்டுவிட்டீர்களா?' எனும் திட்டத்தை 'டிஎஃப்ஐ' குழுமம் தொடங்கியுள்ளது. உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த எடுக்கப்படும் தொடர் முயற்சிகளின் ஓர் அங்கம் இது என்று 'டிஎஃப்ஐ' குழுமம் கூறியது.
ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றில் 10,200 கடைகளை இந்நிறுவனம் நடத்துகிறது. சிங்கப்பூரில் ஜயண்ட், கோல்ட் ஸ்டோரேஜ், சிஎஸ் ஃபிரெஷ், கார்டியன், 7-இலெவன் ஆகியவை இதன்கீழ் செயல்படுகின்றன.
சிங்கப்பூரில் இந்தக் கடைகளில் வாங்கும் ஒவ்வொரு கிலோகிராம் அரிசிக்கும் பத்து காசு சிங்கப்பூர் உணவு வங்கி ஆதரவுத் திட்டத்திற்குச் செல்லும். இதற்கு ஆதரவளிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் நாளை வரை ஜயண்ட் பேரங்காடியில் அனைத்து ரக அரிசிக்கும் 15 விழுக்காட்டு கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும்.
திட்டத்தின்கீழ் பலனடைவோருக்கு 15 வெள்ளி மதிப்புமிக்க மொத்தம் 1,000 பராமரிப்புப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும். இவற்றில் அரிசி, கேனில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் போன்றவை இருக்கும் எனக் கூறப்பட்டது.

