பிடாடாரியில் சங் நீல உத்தமாவின் பெயரில் புதிய சாலை
பிடாடாரி வட்டாரத்தில் புதிய சாலையின் ஒரு பகுதி அடுத்த மாதம் 25ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறந்துவிடப்படும். அதற்கு சங் நீல உத்தமாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
புதிய சாலை இரு வழியிலும் இரண்டு தடங்களைக் கொண்டிருக்கும் என்றபோதும் அடுத்த மாதம் ஒரு வழியில் ஒரு தடம் மட்டுமே திறந்துவிடப்படும். சங் நீல உத்தமா சாலை 2024ஆம் ஆண்டின் முற்பாதியில் முழுமையாகத் திறக்கப்படும். நிரந்தரமாக மூடப்படவிருக்கும் வெர்னன் பார்க் சாலைக்கு மாற்றாக அமையும்.
சிங்கப்பூருக்கு 1299ஆம் ஆண்டில் வந்த பலேம்பாங் இளவரசன் சங் நீல உத்தமாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதிய சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய சாலையின் பெயரை தேசிய வளர்ச்சி அமைச்சு, வீதிகள், கட்டடங்களின் பெயர்களுக்கான வாரியம் ஆகியவை 2019ஆம் ஆண்டில் முடிவுசெய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சு: குரங்கம்மை நோயாளிகள் வீட்டிலிருந்தே குணமடையலாம்
குரங்கம்மை நோயாளிகள் வரும் 22ஆம் தேதி, திங்கட்கிழமை முதல் வீட்டிலிருந்தே குணமடையலாம் என்று தெரிவித்திருக்கிறது.
இவர்களது உடல்நிலை அதற்கேற்ப சீராக இருப்பதாக மருத்துவர் மதிப்பீடு செய்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். இவர்கள் வீட்டில் தங்கி குணமடைவதற்கு உகந்த சூழல் நிலவுவதும் அவசியம்.
தற்போது பொது மருத்துவமனைகளில் சீரான உடல்நிலை இருப்பதாக மதிப்பிடப்படும் குரங்கம்மை நோயாளிகள், அவர்களுக்கான சிறப்புப் பராமரிப்பு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு தொலைமருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உடல்நலப் பிரச்சினைகள் சிக்கலாகக்கூடும் என்று மதிப்பிடப்படுவோர் தொடர்ந்து மருத்துவமனைகளில் பராமரிக்கப்படுவர் என்று அமைச்சு கூறியது.