ஆடம்பரப் பொருள் மோசடியில் சம்பந்தப்பட்ட தம்பதியினரிடம் விசாரணை நடத்த மேலும் சில காலம் தேவைப்படுவதால் அந்தத் தம்பதிக்கான விசாரணைக் காவல் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட $32 மில்லியன் மதிப்புள்ள ஆடம்பரப் பொருள்களை அவற்றை வாங்கியோருக்கு விநியோகிக்காமல் தலைமறைவாகி பிடிபட்ட பை ஜியாபெங், 26, என்பவரும் அவரது தாய்லாந்து மனைவி பான்சுக் ஸ்ரீவாபா, 27, என்பவரும் தங்கள் சார்பாக வழக்கறிஞர்களை நியமித்து உள்ளனர்.
தம்பதியினருக்கு எதிராக காவல்துறையில் 180 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாலும் இவர்கள் தொடர்பான வழக்கு சிக்கல் நிறைந்தது என்பதாலும் தீர விசாரிக்கப் போதுமான அவகாசம் தேவைப்படுவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
"இந்த வழக்கு $20 மில்லியன் இழப்பு தொடர்பானது. மேலும், பொருள்களை வாங்க 'டிரேட்நேஷன்', 'டிரேட் லக்ஷுரி' என்னும் இரு நிறுவனங்களிடம் தரப்பட்ட தொகை எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய விசாரணை அதிகாரிகளுக்குக் கூடுதல் காலம் தேவைப்படுகிறது," என்றார் அந்த வழக்கறிஞர்.
ஆடம்பரக் கைப்பைகள், ஆடம்பரக் கைக்கடிகாரங்கள் விற்பதாக இரு நிறுவனங்களும் கூறியதைத் தொடர்ந்து பலரும் அவற்றுக்காகப் பணம் செலுத்தினர்.
ஆனால் அவர்களுக்குப் பொருள்கள் போய்ச் சேரவில்லை. இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை வாடிக்கையாளர்களை மோசடி செய்த குற்றத்துக்காக பை ஜியாபெங் ஜூன் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரும் அவரது மனைவியும் கடப்பிதழ்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஜூன் 28ஆம் தேதி பை ஜியாபெங் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், ஜூலை 4ஆம் தேதி முதல் இருவரும் தலைமறைவாயினர். நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றதாக நம்பப்பட்டது. அவர்களுக்கு எதிராகக் கைது ஆணையும் இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல்துறையின் தேடுதல் எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்கப்பட்டன.
தீவிர தேடுதலின் விளைவாக ஆகஸ்ட் 11ஆம் தேதி அந்தத் தம்பதியினர் ஜோகூரில் கைது செய்யப்பட்டனர். அவர்களைக் கைது செய்த அரச மலேசிய காவல்துறை அதே நாளில் இருவரையும் சிங்கப்பூர் காவல்துறை
யிடம் ஒப்படைத்தது.
அன்றைய தினம் தம்பதியினர் மீது இரண்டு மோசடிக் குற்றச்சாட்டுகளும் நாட்டைவிட்டு சட்டவிரோதமாக வெளியேறியதாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.

