அனைத்து சிங்கப்பூரர்களும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க அரசாங்கம் உதவிசெய்யும். அன்றாட செலவினங்களை சமாளிக்க அனைத்து குடும்பங்களுக்கும் சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகள் அளிக்கப்படுகின்றன. இதுவரை கிட்டத்தட்ட $180 மில்லியன் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் லீ சியன் லூங் இன்று(ஆகஸ்ட் 21) தேசிய தின பேரணியின்போது தாம் ஆற்றிய சீன உரையில் இந்த விவரங்களைத் தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் $3,700 வரையிலான உதவித்தொகை வழங்கப்படும்.
வரும் 12 மாதங்களுக்கு அரசாங்கம் வழங்கவிருக்கும் உதவித் திட்டங்கள்:
- ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்த மாதம் $1400 ரொக்கம் அளிக்கப்படும்
- அக்டோபரில் $190 வரையிலான யூ-சேவ்(U-save) தள்ளுபடி
- ஜனவரி 2023ல் கூடுதல் சமூக மேம்பாட்டு மன்ற(CDC) பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
- பிப்ரவரி 2023ல் மெடிசேவ் கணக்கில் $300 நிரப்புத்தொகை
ஒவ்வொரு குடும்பத்தின் வருமானம், வீட்டு வகையைப் பொருத்து உதவி வழங்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.
அடுத்தாண்டு மார்ச் முதல், உத்தரவாத தொகுப்புத்திட்டத்தின் கீழ் சிங்கப்பூரர்களுக்கு உதவி வழங்கப்படும்.