கட்டாயம் அல்லது வற்புறுத்தலின்பேரில் இல்லாமல், தங்களது விருப்பத்துதுடனும் பரஸ்பர இணக்கத்துடனும் கூடியதாக இருக்கும் பட்சத்தில் தனிமனிதர்களின் நடத்தையானது அவர்களின் தனிப்பட்ட, சொந்த உரிமை என்பதால் 377A சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்று இந்து ஆலோசனை மன்றம் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், திருமண உறவையும் 377A சட்டப்பிரிவு நீக்கத்தையும் தான் வெவ்வேறாகக் கருதுவதாலும் திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலேயே நிகழ வேண்டும் என்று தான் நம்புவதாலும் திருமண உறவைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
அப்படி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமண உறவை முறைப்படுத்தவோ வலுப்படுத்தவோ எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் வரவேற்பதாக மன்றம் கூறியிருக்கிறது.
குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவு 377A நீக்கப்படும் என்று பிரதமர் லீ அறிவித்ததை அடுத்து, இவ்விவகாரத்தில் இந்து ஆலோசனை மன்றத்தின் நிலைப்பாட்டைத் தமிழ் முரசு கேட்டறிந்தது.
ஓரினச் சேர்க்கையாளர்கள் தத்தெடுப்பு அல்லது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று குடும்பத்தை அமைப்பது குறித்துக் கேட்டதற்கு, தனிமனிதர்கள் இருவர் எவ்வாறு சேர்ந்து வாழ விரும்புகிறார்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று மன்றம் கூறியது.
இருப்பினும், திருமணம் புரிந்துகொண்டு, அவர்கள் தங்களது உறவுகளை முறைப்படுத்த விரும்பினால், அது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்றும் திருமணத்தின் மூலம் தொடங்கப்படும் ஒரு குடும்பமானது ஓர் ஆணையும் (தந்தை) பெண்ணையும் (தாய்) கொண்டதாகவே இருக்க வேண்டும் என்றும் மன்றம் குறிப்பிட்டது.
பள்ளிகளில் பாலியல் கல்வியின்மூலம், ஒருவரின் பாலியல் ஈர்ப்பைப் பொருட்படுத்தாது ஒவ்வொருவரும் கடவுளின் படைப்பு என்று கருதி, அவர்களை மதிப்பதற்குக் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும் என்றும் அவ்வமைப்பு தெரிவித்தது.
தங்களது நடத்தை சட்டத்திற்குட்பட்டும் சமுதாயத்தில் பிறருக்குத் தீங்கு விளைவிக்காத வரையிலும், ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படியும் தாங்கள் விரும்புபவருடனும் வாழ உரிமை உள்ளது என்று மன்றம் கூறியது.

