சாங்கி விமான நிலையத்தின் முனையம் 5ன் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளன. கிருமித் தொற்று காரணமாகக் கடந்த ஈராண்டுகளாகக் கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.
உலக நாடுகளின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து மீண்டுவருகிறது. இதனால் முனையம் 5ன் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளதாகப் பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார்.
ஓராண்டில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளை முனையம் 5 கையாளும். பல அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய முனையமாக இது திகழும் என்று திரு லீ கூறினார். 2030களின் நடுப்பகுதியில் முனையம் தயாராகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதோடு, முனையத்தின் அருகே சாங்கி ஈஸ்ட் நகர்ப்புற வட்டாரம் அமைக்கப்படும். இது ஒரு வர்த்தக, வாழ்க்கைமுறை இடமாக அமையும் என்றார் திரு லீ. சிங்கப்பூரர்களுக்கு வேலை உள்ளிட்ட பல வாய்ப்புகளை இந்த வட்டாரம் அளிக்கும்.
சிங்கப்பூரின் மிகப்பெரிய துறைமுகமாக துவாஸில் ஆண்டு இறுதிக்குள் மேலும் மூன்று கப்பல் நிறுத்தும் இடங்கள் செயல்படத் தொடங்கும். இதனோடு, துவாஸ் துறைமுகத்தில் செயல்படும் கப்பல் நிறுத்தும் இடங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயரும்.
துவாஸ் துறைமுகத்தின் முதற் கட்ட கட்டுமானத்தில் உள்ள இந்த கப்பல் நிறுத்தும் இடங்கள், 20 மில்லியன் இருபது அடி அளவுள்ள கொள்கலன்களைக் கையாளக்கூடிய 21 ஆழ்கடல் கப்பல் நிறுத்தும் இடங்கள் ஆகும்.
கிருமித் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளதை இது குறிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.