உக்ரேன் மீது படையெடுத்த ரஷ்யாவை கண்டித்ததீர்மானத்தின்மீது ஐநாவில் வாக்கெடுப்பு நடந்தது. அப்போது பல நாடுகளும் பல நிலைகளை எடுத்தன என்று பிரதமர் லீ சியன் லூங் சுட்டினார்.
“ஆசிய நாடுகளைப் பார்க்கையில், இந்தியா அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சீனாவுடன் கூடிய தனது உறவே இந்தியாவின் முக்கிய உத்திபூர்வ பரிசீலனையாக அப்போது இருந்தது.
“சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல சச்சரவுகள் இருக்கின்றன. ஆகையால், ரஷ்யாவுடன் தன்னுடைய தோழமை உறவுகளைக் கட்டிக்காக்க இந்தியாவுக்கு போதிய காரணங்கள் உள்ளன. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ராணுவச் சாதனங்களையும் வாங்குகிறது.
“சீனாவும் அந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. சீனா, உக்ரேன் போரை அமெரிக்காவுடன்கூடிய தனது உறவுகளின் வழியாக ஊடுருவி பார்க்கிறது என்ற திரு லீ, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட உறவு பிரச்சினைக்கு உள்ளாகி இருப்பதைச் சுட்டினார்.
“உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததை தான் எதிர்த்தாலும் தம்மிடம் அமெரிக்கா அதற்கு நன்றியுடன் நடந்துகொள்ளாது என்று சீனா நம்புகிறது,” திரு லீ குறிப்பிட்டார். ரஷ்யாவை சமாளித்த பிறகு அமெரிக்கா, சீனா பக்கம் திரும்பி அதனுடன் முட்டி மோதும் என்று சில சீன கட்டுரையாளர்கள்கூட கருதுகிறார்கள்.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து அந்தப் பிரச்சினையில் சிங்கப்பூர் உறுதியான ஒரு நிலையை எடுத்தது. ரஷ்யாவைக் கண்டித்தது.
சிங்கப்பூர் ஏன் இவ்வாறு செயல்பட்டது என்பதை பிரதமர் லீ சியன் லூங் இன்று (ஆகஸ்ட் 21) தமது தேசிய நாள் பேரணி செய்தியில் சீன மொழியில் உரையாற்றியபோது விளக்கினார்.
அந்தப் பிரச்சினையில் அரசாங்கம் எடுத்த நிலையை பெரும்பாலான சிங்கப்பூரர்கள் புரிந்துகொண்டதை திரு லீ சுட்டினார்.
இருந்தாலும்கூட, அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு ரஷ்யாவை சிங்கப்பூர் ஏன் கண்டிக்கிறது என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், சிங்கப்பூரை பொறுத்தவரை அந்தப் பிரச்சினை ஏதாவது ஒரு தரப்பில் சேர்ந்துகொள்ளும் பிரச்சினை அல்ல என்று திரு லீ குறிப்பிட்டார்.
“நாம் அமெரிக்காவுடன் சேரவில்லை. அதேவேளையில், ரஷ்யாவுக்கும் நாம் எதிரி அல்ல. இருந்தாலும்கூட, நாம் நம் நிலையில் உறுதியாக இருந்து அடிப்படை கோட்பாடுகளைத் தற்காக்க வேண்டிய தேவை இருக்கிறது.
“ஒரு நாடு சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதனுடைய இறையாண்மையையும் எல்லைகளையும் யாரும் மதித்து நடக்கவேண்டும் என்பதே சிங்கப்பூரின் நிலை.
“இந்தக் கோட்பாடு எல்லா நாடுகளுக்குமே உரியது. குறிப்பாக சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு மிக முக்கியமானது.
“கடந்த 1983ல் கரீபிய நாடான கிரீனடாவை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது ஐநாவில் அமெரிக்காவுக்கு எதிராக நாம் வாக்களித்து இருக்கிறோம். அதேபோல, 1978ல் கம்போடியாவை வியட்னாம் ஆக்கிரமித்தபோது அதை வலுவாக நாம் கண்டித்தோம்.
“உக்ரேன் பிரச்சினையில் நாம் உறுதியாக, தெள்ளத்தெளிவாக இல்லை என்றால், சிங்கப்பூர் மீது யாராவது படையெடுக்கும்போது நமக்காக பேச யாரும் இருக்கமாட்டார்கள்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.
“சில அமெரிக்கர்கள் உக்ரேன் நெருக்கடியை ஜனநாயகத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடைப்பட்ட ஒரு போராக வகைப்படுத்தி இருக்கிறார்கள். இவற்றின் விளைவாக சீனா, ரஷ்யாவுடன் கூடிய தனது எல்லையில்லா உறவை மேலும் பலப்படுத்த விரும்பியது.
“ஆசியான் நாடுகளைப் பொறுத்தவரை, வியட்னாமும் லாவோசும் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சோவியத் யுகத்திலிருந்தே அந்த இரு நாடுகளும் ரஷ்யாவுக்கு அணுக்க நாடுகளாக இருந்து வருவதே இதற்கான காரணம்,” என்றார் திரு லீ.
மற்ற ஆசியான் நாடுகள் அந்த ஐநா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இருந்தாலும்கூட அவை தங்கள் அறிக்கையில் ரஷ்யாவின் பெயரைக் குறிப்பிடவில்லை.
இது புரிந்துகொள்ளத் தக்கதுதான். ஆசியானில் அந்த நாடுகள் எல்லாம் ஆகச் சிறிய நாடுகள் அல்ல. நாம் கருதுவதைப் போல எளிதில் பாதிக்கப்படக்கூடியவையாக அவை தங்களைக் கருதிக் கொள்வதில்லை.
“ஆசியானிலேயே சிங்கப்பூர்தான் ஆகச் சிறிய நாடு. ஆகையால், நம்முடைய நலன்களும் எண்ணங்களும் மற்ற நாடுகளில் இருந்து இயற்கையிலேயே வேறுபட்டு இருக்கக்கூடியவை.
“இதன் காரணமாகத்தான், ரஷ்ய ஆக்கிரமிப்பை வெளிப்படையாக நாம் கண்டித்ததோடு மட்டுமின்றி ரஷ்யா மீது சொந்தமாக நாம் தடையையும் விதித்தோம்,” என்றாரவர்.