சிங்கப்பூரை பொறுத்தவரை, நல்ல தலைமைத்துவம் என்பது ஒரு விவாதப் பொருள் அல்ல என்று பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தின பேரணி உரையில் தெரிவித்து இருக்கிறார். அடுத்த பிரதமராகப் பதவி ஏற்கவிருக்கும் லாரன்ஸ் வோங்கிற்கு முழு ஆதரவைத் தரும்படி சிங்கப்பூரர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
சிறிய நாடான சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றி பெறுவதும் ஜீவித்து இருப்பதும் சரியான தலைவர்களைப் பெற்றிருப்பதைப் பொறுத்தே இருக்கும் என்று பிரதமர் வலியுறுத்திக் கூறினார். நாட்டிற்குச் சேவையாற்றக்கூடிய பொருத்தமான தலைவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு நாட்டிற்கு தலைசிறந்த சேவையாற்ற உதவுவதற்கு நாடு தொடர்ந்து கடுமையாகப் பாடுபட வேண்டி இருக்கிறது என்று திரு லீ கூறினார்.
சிங்கப்பூரின் வெற்றிக்கு அடிப்படையான இதர இரண்டு அம்சங்களையும் திரு லீ தமது உரையில் குறிப்பிட்டார். ஐக்கியமான மக்கள் அவற்றில் ஒன்று. மக்களுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் இடையில் அதிக நம்பிக்கை இருப்பது மற்றொன்று .
ஆண்டுக்காண்டு தலைதூக்கக்கூடிய சவால்களைப் புத்தாக்க முறையிலும் மீள்திறனோடும் சமாளித்து வெற்றிபெற இவை உயிர்நாடியானவை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தலைசிறந்த திட்டங்கள் இருக்கலாம். ஆனால் இந்த மூன்று அடிப்படை அம்சங்கள் இல்லை என்றால் அந்தத் திட்டங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்று திரு லீ கூறினார்.மக்களின் ஆதரவுடன் நம் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நனவாக்க முடியும் என்றார் அவர்.