மோனலிசா
கொவிட்-19 கிருமிப் பரவல் காலகட்டத்தில் வெளியே அதிகம் செல்ல முடியாத நிலையில் தம் அண்டைவீடுகளில் வசிக்கும் முதியவர்கள் பலர், கவலையுடன் காணப்பட்டதை ஈசூன் குடியிருப்பாளர் ருக்கு பக்கிரிசாமி கவனித்தார். அவர்களை மகிழ்விக்க அவர்களுக்காக உணவு சமைத்துக் கொடுத்தார். நேற்று பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் 72 வயது திருவாட்டி ருக்கு பக்கிரிசாமியின் தன்னலமற்ற செயலைப் பாராட்டினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவை சிறுவயதிலிருந்தே முன்மாதிரியாகக் கருதிய திருவாட்டி ருக்கு, தம் பெயரை திரு லீ குவான் இயூவின் மகனான பிரதமர் லீ சியன் லூங் பேரணி உரையில் குறிப்பிட்டது பெருமையளிப்பதாகக் கூறினார். 'சீஓபீ' என்று இன்று அழைக்கப்படும் சுற்றுக்காவல் பணியில் குடிமக்கள் பங்கேற்கும் திட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தம் அண்ணன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவை சந்திக்க ருக்குவிற்கு வாய்ப்பு கிடைத்தது.
சிங்கப்பூரின் நான்கு இனத்து குழந்தைகளும் கலந்துகொள்ள புக்கிட் மேரா சமூக மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருந்து நிகழ்ச்சியில், தமிழ் இன குழந்தைகளைப் பிரதிநிதித்த 7 வயது ருக்குவிற்கு அன்றைய பிரதமரான லீ குவான் இயூ கைகொடுத்து வாழ்த்துக் கூறியது மறக்க முடியாத தருணமென ருக்கு நினைவுகூர்ந்தார்.
திரு லீ குவான் இயூவை ஓர் அண்ணன் போல் கருதி தம் உயிருக்கு நிகராகப் பார்த்த ருக்குவிற்கு, அன்று நாட்டிற்காக தான் ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆசை பிறந்தது.
நேற்று பிரதமர் தம் பெயரை உரையின்போது குறிப்பிட்டபோது சமுதாயத்திற்குத் தாம் பயனுள்ள வகையில் பங்காற்றியிருக்கும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தாம் பெற்றதாக அவர் பகிர்ந்துகொண்டார்.