பாய லேபாரில் அமையவிருக்கும் எதிர்கால நகரில் 150,000 புதிய பொது மற்றும் தனியார் வீடுகள் கட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கை, பொங்கோல், செங்காங் ஆகிய இரண்டு பகுதிகளிலும் இருக்கும் மொத்த வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏறக்குறைய சமமானது.
பாய லேபார் ஆகாயப்படைத் தளம் 2030களில் வேறு இடத்திற்கு மாறுகிறது. அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் வீடுகளைக் கட்டத் திட்டமிருக்கிறது.
பாய லேபார் வட்டார மறுமேம்பாடு திட்டங்களைப் பற்றி தமது தேசிய நாள் பேரணி உரையில் விளக்கிய பிரதமர், இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
பாய லேபார் விமானத் தளம் சாங்கிக்கு இடமாறுவதால் ஹவ்காங், மரின் பரேடு, பொங்கோல் போன்ற அருகில் உள்ள நகர்களில் கட்டட உயரக் கட்டுப்பாடுகளை அகற்ற முடியும் என்றார்.
அதாவது, இந்த நகரங்களில் உள்ள இடங்கள் இன்னும் சிறந்த முறையில் பயன்படுத்தப்படும். மேலும் பல வசதிகளுடன் அவை மீண்டும் உருவாக்கப்படும் என்று திரு லீ விளக்கினார். இந்த மேம்பாடுகள் ஒரே நாளில் நிகழ்ந்துவிடாது என்ற அவர், அதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் என்றார்.
இந்தத் திட்டங்களின் மூலம் சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியை முற்றிலும் புதிய வடிவில் மாற்றியமைக்க முடியும் என்று திரு லீ குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் சிங்கப்பூரில் இடம் இல்லாமல் போகக்கூடிய நிலை இருக்காது. போதிய வீடுகளும் இருக்கும். அந்த வீடுகள் கட்டுப்படியாகக் கூடியவையாகவும் இருக்கும் என்ற திரு லீ, அரசாங்கம் தனது ஆய்வுகளையும் திட்டங்களையும் செய்து முடித்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்களுக்குப் போதிய வீடுகளைக் கட்டத் தேவைப்படும் நிலம் இல்லாமல் போகலாம் என்ற பிரச்சினை இருக்காது. வீடுகளும் வாங்க முடியாத அளவுக்கு இருக்கும் என்ற நிலையும் வராது. ஆனால், உண்மையிலேயே பிரச்சினை என்னவென்றால் இங்கு பிறந்து வளர்ந்து அந்த வீடுகளில் குடியிருக்க போதிய பிள்ளைகள் இருப்பார்களா என்பதுதான் என்று திரு லீ தமது உரையில் குறிப்பிட்டார்.
பாய லேபார் விமானத் தளம் வேறு இடத்திற்கு மாறும்போது பாய லேபாரில் ஏறக்குறைய 800 ஹெக்டர் நிலம் கிடைக்கும். அதில் வீடுகளையும் தொழில் பேட்டைகளையும் அமைக்கலாம்.
அந்த விமானத் தளத்தில் 3.8 கி.மீ. நீளமுள்ள ஓடுபாதை இருக்கிறது. அந்த ஓடுபாதையை பாய லேபார் நகரின் மத்திய முதுகெலும்பாகத் திகழும் வகையில் அமைக்க முடியும். அதை பசுமைமிகு இணைப்பு வழியாக அல்லது சமூக இடமாக ஒரு முனையில் இருந்து அந்த நகரின் மறுமுனை வரை நீளும் ஒன்றாக அமைக்க முடியும் என்றார் திரு லீ.
முதுகெலும்புபோல் அமையும் அந்தப் பாதைக்கு இரு பக்கத்திலும் அரசாங்கம், தனியார் வீடுகள் கட்ட முடியும். பாய லேபாருக்கே உரிய கவர்ச்சி மிகுந்த பாரம்பரிய அம்சங்களுடன், தனிச்சிறப்பு அம்சங்களுடன் அது திகழும் என்றும் திரு லீ தெரிவித்தார்.
அரசாங்கம் சிங்கப்பூரை எப்படி எப்படியெல்லாம் உருமாற்றுகிறது என்பதற்கு பாய லேபார் ஓர் எடுத்துக்காட்டுதான் என்று கூறிய திரு லீ, மாபெரும் தென்புல நீர் முகப்பு, ஜூரோங் ஏரி மாவட்டம் போன்ற இதர திட்டங்களையும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.

