சிங்கப்பூரின் மக்கள்தொகை விரைவாக மூப்படைவதால் பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) உயர்த்துவது அவசியமாகிறது என பிரதமர் லீ சியன் லூங் தமது மாண்டரின் உரையில் குறிப்பிட்டார்.
மூத்தோருக்கு சிறந்த பராமரிப்பை வழங்க சிங்கப்பூர் தயாராக இருப்பது அவசியம். சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைக் குறைத்து கூடுதல் மருத்துவ உதவிகளை மூத்த சிங்கப்பூரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்குவது இதில் அடங்கும்.
மூத்தோர் எளிதில் மருத்துவ சேவைகளைப் பெறுவதற்கு வசதியாக அதிகமான மருத்துவமனைகளும் பலதுறை மருந்தகங்களும் இன்னபிற வசதிகளும் கட்டப்பட வேண்டும். இவையெல்லாம் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூகச் செலவினம் கடுமையாக அதிகரிப்பதையே உணர்த்துவதாக திரு லீ தெரிவித்தார்.
"ஜிஎஸ்டியை உயர்த்தாமல் இருப்பது அரசியல் ரீதியாக பலனளிக்கலாம். ஆனால் அது பொறுப்பற்ற செயலாக இருக்கும்," என்றார் அவர்.
"செலவுக்குப் போதிய பணம் இல்லை என மக்கள் கவலைப்படும்போது அரசாங்கமும் தன்னிடம் போதுமான பணம் இல்லாததை நினைத்து வருத்தப்படலாம்," என்று கூறிய பிரதமர், குறைந்த வருமானக் குடும்பத்தினரைப் பராமரிப்பதற்கும் மூத்தோருக்கான சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளைச் சமாளிப்பதற்கும் போதுமான வளங்களைப் பெறாவிட்டால் அது கவலைக்குரியதாக இருக்கும் என்றார்.
"ஆறில் ஒரு சிங்கப்பூரர் 65 வயதைக் கடந்தவராக உள்ளார். 2030ஆம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை நான்கில் ஒருவர் என்று அதிகரிக்கும். அப்போது நமது முதிர்ச்சியடைந்த பேட்டைகள் சீக்கிரம் மூப்படைந்தவர்களைக் கொண்டிருக்கும்," என்றார்
திரு லீ.
1980களில் தாம் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது தமது டெக் கீ தொகுதி குடியிருப்பாளர்களில் மணமுடித்த இளம் தம்பதியினர் ஏராளமாக இருந்ததாக அவர் சொன்னார். ஆனால் தற்போது அவர்களில் பெரும்பாலானோருக்கு ஊன்றுகோலும் சக்கர நாற்காலியும் தேவைப்படுவதாக திரு லீ குறிப்பிட்டார்.
"வயது முதிர்ந்த நிலையிலும் அவர்கள் சமூக நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன். அதேநேரம், வரும் காலங்களில் அவர்களுக்கான சுகாதாரப் பராமரிப்பு செலவுகள் நிச்சயமாக உயரும் என்பதால் அவர்களுக்காக நான் கவலைப்படுகிறேன். எனவேதான் நமது மூத்தோரை சிறந்த முறையில் பராமரிக்க நாம் தயாராக வேண்டும்.
"விவேகமான நிதி நிர்வாகத்தையும் போதுமான நிதிக் கையிருப்பையும் கொண்டிருந்ததால் இதர நாடுகளைக் காட்டிலும் கொவிட்-19 தொற்று காலத்தை சிங்கப்பூர் சிறப்பான முறையில் சமாளித்தது. வருங்காலத் திட்டத்திற்காக நமது குடியரசு சேமிப்பைத் தொடருவது அவசியம்," என்று திரு லீ விவரித்தார்.

