சிங்கப்பூர் கதையின் அடுத்த அத்தியாயத்துக்கு நான்காம் தலைமுறைக் குழு முன்னேறும் சிங்கப்பூர் கலந்துரையாடல் திட்டம் மூலம் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறது.
அத்திட்டத்தை அண்மையில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தொடங்கி வைத்தார் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று தமது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடல் திட்டம் சிங்கப்பூர் மக்களில் பல்வேறு பிரிவினர் எதிர்காலத்தில் எதைப் பார்க்க, பெற விரும்புகிறார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டும் என்றும் திரு லீ விவரித்தார்.
"இதன் மூலம் ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் சிறப்பான தெரிவுகளைத் தேர்வு செய்ய அரசாங்கம் விரும்புகிறது.
"அவற்றுள், எந்த வாழ்க்கைப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் அவர்களுக்கு வாழ்வில் ஒரு நல்ல தொடக்கம்; புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய வீடமைப்பு, குழந்தைப் பராமரிப்புச் சேவை; உங்கள் வாழ்க்கைத் தொழிலில் நீங்கள் மேம்பட வாய்ப்புகள்; ஆரோக்கியமான, மனநிறைவுள்ள ஓய்வுகாலத்தை உங்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பது ஆகியவை அடங்கும்," என்று பிரதமர் பட்டியலிட்டார்.
அடுத்த தலைமுறையில் இவற்றை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கு நாம் எந்த வகையான இலக்குகளை வகுத்துக்கொள்ள வேண்டும்? இந்த இலக்குகளை அடைய நாம் எவ்வாறு அனைவரையும் ஒன்றிணைக்கலாம் போன்ற முக்கியமான கேள்விகளை நாம் நம்மை கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் லீ தெரிவித்தார்.

