'பள்ளியில் அறியாததை அறிந்தேன்'
பல்கலைக்கழகத்தில் தான் விரும்பிய துறையில் பயில்வதற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் பிருந்தா செல்வம், 22, தன் கல்விப் பயணத்தில் இடைவெளி விட்டார். 2018ல் தன் மேல்நிலைத் தேர்வை முடித்துவிட்டு பல்கலைக்கழகத்தில் விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் அதே துறைசார்ந்த ஒரு வேலையில் அவர் சேர்ந்தார்.
மருந்தகம் ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றியதுடன் கொவிட்-19 கிருமிப் பரவலின்போது முன்கள ஊழியராக ஆய்வுக்கூடங்களிலும் அவர் பணிபுரிந்தார். இந்த அனுபவத்துடன் மீண்டும் மறு ஆண்டு பல்கலைக்கழகத்தின் வேறு துறையில் பயிலப் பதிவுசெய்துகொண்டார் பிருந்தா.
"கொவிட்-19 கிருமிப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகளால் மருந்தகத்திற்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்தது. எனக்கு வேலையும் அதிகம் இல்லை. நானும் என் குடும்பத்தாரும் வீட்டிலிருந்தவாறு ஒரு வணிகத்தைத் தொடங்கலாம் என்று முடிவெடுத்தோம்," என்றார் பிருந்தா.
'நட்டெல்லா டார்ட்ஸ்', 'குவே டாலியா' போன்ற பலகார வகைகளை வீட்டிலேயே தயார் செய்து விற்கத் தொடங்கினார். இந்த வர்த்தகத்திற்கு நான்கு சகோதரர்களும் பக்கபலமாக இருந்தனர் என்றார் பிருந்தா.
"வருமானத்தை நிர்வகிப்பது, என்னையே நான் மேம்படுத்திக்கொள்வது, பெற்றோரைச் சார்ந்திருக்காமல் வாழ்வது எனப் பள்ளியில் கற்றுக்கொள்ளாத பாடங்களை இந்த இடைவெளியின்போதுதான் கற்றுக்கொண்டேன். அதோடு, முன்னதாக நான் பயில விரும்பிய துறையைவிட மேலும் பொருத்தமான ஒரு துறையில் இப்போது பயில்கிறேன்," என்றார் பிருந்தா.
"மாணவர்கள் துணிந்து தங்களது திறமைகளை அறிந்து அவற்றை வெளிப்படுத்த வேண்டும். அதற்காக கல்விக் காலத்தின்போது இடைவெளி விட்டாலும் பரவாயில்லை," என்றார் பிருந்தாவின் தந்தை திரு செல்வம் மாணிக்கம், 50. முதலில் அவரும் மற்ற பெற்றோரைப் போல யோசித்தபோதும் தன் மகளின் திறமை மீது அவர் கொண்ட நம்பிக்கையால் மனம் மாறியதாகக் கூறினார்.
ஆனால் மகள் இடைவெளி விட்டதுபோல் தம் மகன்களும் இடைவெளி விடுவதாக இருந்தால் அப்போது தனக்குச் சற்று தயக்கம் ஏற்படும் என்றார் திரு செல்வம்.
"சிங்கப்பூரில் பிறக்கும் ஆண்கள், ஈராண்டுகள் தேசிய சேவையாற்ற வேண்டியுள்ளதால் அதன் பின்னர் படிப்பை மேலும் அவர்கள் தள்ளிப்போட்டால், திருமணமும் தள்ளிப்போகலாம்," என்று கவலை தெரிவித்தார் அவர்.

