தனது மனநலம் கருதி படிப்பிலிருந்து சிறிது காலம் விடுப்பு எடுத்துக்கொண்டார் 19 வயது ஷெரீன் ஃபர்ஹானா. 2019ல் சாதாரண நிலைத் தேர்வுகளை முடித்த நிலையில் தொடர் தேர்வுகளாலும் மதிப்பீடுகளாலும் தனக்கு மனவுளைச்சல் அதிகரித்ததாகக் குறிப்பிட்டார் அவர்.
அதனால் தன்னுடைய மனநலத்தைப் பேண ஓர் இடைவெளி தேவைப்பட்டது. ஆனால் வீட்டிலேயே முடங்கியிருந்ததால் அவருக்குச் சலிப்புத் தட்டியது.
ஒருநாள் உள்ளூர் பிரபலம் ஒருவரின் காணொளியைப் பார்த்தபோது வீட்டிலிருந்து வணிகம் செய்வது பற்றி ஃபர்ஹானாவுக்குத் தெரியவந்தது. சொந்தக் காலில் நிற்க விரும்பிய ஃபர்ஹானா, வீட்டிலிருந்து தொழில் செய்வதைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.
ஐந்தே நாள்களில் ஆபரணங்களை விற்கும் முயற்சியைத் தொடங்கினார். இன்று ஆபரணங்கள், வாசனைத் திரவியங்கள், 'சன்கிளாசஸ்', அழகு சாதன பொருள்கள், பிரபல மிட்டாய் வகைகள் என பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வருகிறார்.
"இந்த இடைவெளி காலத்தில்தான் என் திறன்கள் பற்றி அறிந்துகொண்டேன். தொழில் தொடங்கிய நாளிலிருந்து நானே எனக்கு வழிகாட்டியாக இருக்கிறேன்.
"சேமிப்பைக் கொண்டு தொடர்ந்து வியாபாரத்தைத் தக்கவைத்துக்கொள்கிறேன். விற்ற பொருள்களிலிருந்து வரும் லாபத்தை தொழில் மேம்படுவதற்காக முதலீடு செய்கிறேன்," என்றார் ஃபர்ஹானா.

