பிருந்தாவைப் போல் தன் கல்விக் காலத்தில் இடைவெளி விட்ட மற்றொரு இளையர் ராஜ்மாள் ராமதாஸ், 26. பலதுறைத் தொழிற்கல்லூரியில் 2017ஆம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு, பல்கலைக்கழகம் செல்வதற்குமுன் ஈராண்டு இடைவெளியின்போது கணக்காய்வு நிறுவனம் ஒன்றில் முழுநேரச் செயலாளர் பணியில் இருந்தார் அவர்.
தனது பட்டப்படிப்புக்கான செலவுகள் பெற்றோர் மீது விழுந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ராஜ்மாள். பல வாடிக்கையாளர்களின் கணக்குகளைத் தானே சுயமாக நிர்வகித்ததாகவும் ஆசிய நாடுகள் பலவற்றுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்ததாகவும் பகிர்ந்துகொண்டார்.
"என்மீதுள்ள அக்கறையால் படிப்பைச் சீக்கிரம் முடித்துவிடவேண்டும் என என் பெற்றோர் என்னைக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் எதிர்காலத்தில் நல்ல வேலை பெறுவதற்கு அனுபவம் அத்தியாவசியம். இதை என் பெற்றோருக்குப் புரியவைத்து 2019ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் இணைந்து இவ்வாண்டு என் கல்விப் பயணத்தை முடித்துவிட்டேன்," என்று பெருமிதத்துடன் கூறினார் ராஜ்மாள்.
"என் மகளின் உறுதியைக் காணும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அவள் பேச்சிலிருந்த தெளிவும் நம்பிக்கையும் ஒரு பெற்றோராக என் கடமையை நான் நன்றாகச் செய்திருக்கிறேன் என்ற உத்தரவாதத்தை எனக்கு அளித்தது," என்றார் ராஜ்மாளின் தந்தை பழனிசாமி ராமதாஸ், 58.

