இரு ஆண்களுக்கு இடையிலான ஓரின பாலியல் உறவைக் குற்றமாகக் கருதும் சட்டப்பிரிவு 377ஏ நீக்கப்பட்டாலும் கல்விக் கொள்கைகள், பாடத்திட்டங்கள் சிங்கப்பூரின் குடும்பப் பண்புகளையும்
சமூக நெறிமுறைகளையும் ஒட்டியே இருக்கும் என்று கல்வி அமைச்சு நேற்று மறுவுறுதிப்படுத்தியது.
இதையே பெரும்பாலான சிங்கப்பூரர்களின் விருப்பமாகவும் இருப்ப தாக நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அது சுட்டிக்காட்டியிருந்தது.
பள்ளிகளும் உயர் கல்வி நிலையங்களும் அறிவாற்றலைப் பெருக்கும் இடமாக மட்டுமே இருக்கும். சமூகத்தை பிளவுப்படுத்தும் விவகாரங்களுக்கு வாக்குவாதத் தளமாகவும் போட்டியிடும் இடமாகவும் அது இருக்காது.
ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான திருமணப் பந்தமே சிங்கப்பூர் சமூகக் கட்டமைப்பின் அடித்தளமாகும் என்று கல்வி அமைச்சு கூறியது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை தமது தேசிய நாள் பேரணி உரையின்போது ஆண்களுக்கு இடையிலான ஒத்த பாலீர்ப்புடைய உறவைக் குற்றச்செயலாக வகைப்படுத்தும் சட்டப் பிரிவு 377ஏ நீக்கப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.