இவ்வாண்டின் தேசிய தினப் பேரணியைத் தொடர்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளும் உடல் நலப் பிரச்சினைகளும் சிங்கப்பூரர்களின் பெருங்கவலைகளாக இருப்பது ஆய்வு ஒன்று மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த தேசிய தினப் பேரணி உரைக்குப் பிறகு 600 பேரிடம் அது பற்றி கருத்தறியப்பட்டது.
மிலியுவ் இன்சைட் எனும் அந்த ஆய்வில் சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவு 377ஏ நீக்குவது குறித்தும் கருத்து கேட்கப்பட்டது.
பெரும்பாலோர் அந்த விவகாரத்தில் நடுநிலையை வகிக்க விரும்புகின்றனர். அந்தச் சட்டம் நீக்கப்படுவதை யாரும் எதிர்க்கவில்லை. அதற்கு ஆதரவான கருத்தையே பலரும் வெளிப்படுத்தி னர்.
பிரதமர் லீ சியன் லூங் தனது வருடாந்திர தேசிய தினப் பேரணி உரையில் ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றச்செயலாகக் கருதும் சட்டப் பிரிவு உட்பட பல விவகாரங்கள் பற்றி பேசினார்.
16 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதினரிடம் 12 முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இதில் எது உங்களுடைய முக்கிய கவலையாக இருக்கிறது என்று பங்கேற்பாளர்களிடம் கேட்கப்பட்டது.
ரஷ்யா-உக்ரேன் பதற்றம், கொவிட்-19 உருமாறிய கிருமிகள், பொருளியல் மந்தநிலை, பருவநிலை மாற்றம் உட்பட 12 பிரச்சினைகள் பற்றி அவர்களிடம் கருத்தறியப்பட்டது.
அப்போது பத்தில் ஒன்பது பேர் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு தங்களுடைய முக்கிய கவலையாக இருப்பதாகக் கூறினர்.
இதற்கு அடுத்ததாக ஏறக்குறைய பாதி பேர் பொருளியல் மந்தநிலை கவலையளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
நிலைத்தன்மை மற்றும் உடல் நலப் பிரச்சினைகளும் பங்கேற்றவர்களின் கவலைகளாக உள்ளன.
பத்தில் நான்கு பேர் பருவநிலை மாற்றம் குறித்து கவலைப்படுகின்றனர்.
பத்தில் மூவருக்கு மேல் புதிய உருமாறிய கொவிட்-19 கிருமி கவலையை ஏற்படுத்தியிருக் கிறது.
இரு ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றமாக்கும் சட்டப்பிரிவு 377ஏ நீக்கப்படுவதை பத்தில் இரண்டு பேர் மட்டுமே விரும்பவில்லை.
இந்தச் சட்டம் நீக்கப்படும் என்று பிரதமர் லீ தமது தேசிய தினப் பேரணியில் அறிவித்தபோதே ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான திருமண உறவை பாதுகாக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று கூறினார். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் சவால் விடுக்கும் வழக்கு களைத் தடுக்கும் வகையில் அந்த சட்டத் திருத்தம் இருக்கும் என்றார் அவர்.
'சட்டப்பிரிவு 377ஏ' நீக்குவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கேட்கப்பட்டதற்கு பாதிக்கும் சற்றுக் குறைவானவர்கள் ஆட்சேபம் இல்லை என்று கூறினர். 34 விழுக்காட்டினர் இந்த நடவடிக்கையை ஆதரிப்பதாகவும் 20 விழுக்காட்டினர் ஆதரிக்கவில்லை என்றும் கூறினர்.
இதற்கிடையே சட்டப்பிரிவு 377Aஐ நீக்கும் நடவடிக்கை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று கூறிய 'மிலியு இன்சைட்' ஆய்வின் தலைமை நிர்வாகியான ஜெரால்ட் ஆங், ஆய்வின் முடிவுகள் அம் முடிவை ஆதரிப்பதாக உள்ளது என்றார்.

