ஏழு ஆண்டுகளில் 11 சிறுவர்களைத் திட்டமிட்டு பாலியல் உறவுக்கு ஆயுத்தப்படுத்தி அவர்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்த ஆடவருக்கு 42 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.
கற்றல் உதவியாளராக இருந்த அந்த ஆடவர் பள்ளிக்குப் பிந்திய பராமரிப்பு நிலையத்தில் மாணவர் களைச் சந்தித்தார்.
சிறுவர் மீது பாலியல் ஈர்ப்பு, அவர்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட மிகவும் மோசமான வழக்குகளில் இதுவும் ஒன்று என அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
சிறுவர் மீது பாலியல் ஈர்ப்புள்ள 'ஆபத்தானவர்' என்று அவர்கள் குற்றவாளியை வருணித்தனர்.
ஒன்பதிலிருந்து 11 வயது வரை இருந்த நான்கு சிறுவர்களிடம். பாலியல் உறுப்பின் ஊடுருவல் வழி மோசமான பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஆறு குற்றச்சாட்டுகளை ஆடவர் ஒப்புக்கொண்டார்.
மோசமான பாலியல் வன்கொடுமை, பாலியல் உறுப்பின் ஊடுருவல் வழி மோசமான பாலியல் வன்முறை, சிறுவரின் பாலியல் உறுப்புகளை ஊடுருவியது உள்ளிட்ட 54 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
சிறுவர்களைக் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, பராமரிப்பு நிலையத்திலும் தனது இல்லத்திலும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
சிறுவர்களின் பெயர்விவரங்களை மறைக்கும் பொருட்டு அவரது அடையாளமும் மறைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியக் காவல்துறை அளித்த துப்பின்பேரில் ஆடவர் பிடிபட்டார். சிறுவர்களின் ஆபாசப் படங்களைத் தரவிறக்குவதற்கான இணையத்தளங்களைக் கொண்ட 17 மின்னஞ்சல்கள் அவரது கணக்கில் இருந்தது என்று ஆஸ்திரேலியக் காவல்துறை கூறியது.