பாண்டான் ஆற்றில் நேற்று காலை கயாக் படகுகளைச் செலுத்தச் சென்ற நண்பர் குழுவினர், ஆற்றில் 60 வயது ஆடவரின் சடலத்தைக் கண்டனர்.
காவல்துறைக் கடற் படையை அவர்கள் உதவிக்கு அழைத்ததை அடுத்து, சடலம் மீட்கப்பட்டது.
47 வயது திரு ரிச் லியாவும் அவரது நண்பர்களும் வெஸ்ட் கோஸ்ட் முதல் புலாவ் ஹந்து வரை கயாக் படகு களைச் செலுத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் திட்டத்தை மாற்றி பாண்டான் ஆற்றில் படகுகளைச் செலுத்தினர்.
ஆற்றில் சென்றபோது, சாக்கு போன்ற ஒன்று மிதந்து சென்றதைக் கண்டதாக திரு லியாவ் சொன்னார். உற்றுப் பார்த்தபோது, ஆடவரின் முதுகில் பச்சை குத்தி இருந்ததையும் அவரது நரை முடியையும் பார்த்ததாகவும் திரு லியாவ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
தங்கள் உதவி கோரி காலை 9.57 மணிக்குத் அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்தது.
60 வயது ஆடவரின் சடலம் மீட்கப்பட்டதாக அது கூறியது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் குற்றம் நிகழ்ந்திருக்கும் என்ற சந்தேகம் இல்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, நேற்று காலை 10.15 மணிக்கு உதவி கோரி அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது.
தனது அதிகாரிகள் சடலத்தை மீட்டு, அதைக் கரை சேர்க்க உதவியதாகவும் அது கூறியது.
ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் விழுந்த ஆடவரின் சடலம்தான் மீட்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் அறிகிறது.