உள்கட்டமைப்பு வசதிகளை அமைப்பது, ஆய்வு, மேம்பாட்டில் முதலீடு செய்வது
சிங்கப்பூர் அதன் மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க அடித்தளம் அமைத்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் உருவெடுத்து வரும் வேளையில், அவற்றில் மறைந்திருக்கும் அபாயங்களில் இருந்து பயனாளர்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
'மெட்டவர்ஸ்', 'வெப் 3.0' போன்ற புதிய தொழில்நுட்பங்கள் உருவெடுத்து வரும் நிலையில், கூடுதல் உள்கட்டமைப்பை உருவாக்குவது, ஆய்வு, மேம்பாட்டில் முதலீடு செய்வது, திறனாளர்களை வளர்ப்பது உள்ளிட்டவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றிய தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ இதனைத் தெரிவித்தார்.
சொல்லப் போனால், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யப்பட்டு வருகின்றன. மின்னிலக்க (கிரிப்டோ) நாணயம், 'வெப் 3.0' தொடர்பில் தொழில் தொடங்கிய நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் கடந்த ஆண்டு US$33 பில்லியனுக்கும் (S$46 பி.) அதிகமாக முதலீடு செய்தனர்.
இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், 'மெட்டவர்ஸ்' தொழில்நுட்பத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளிலும் US$120 பில்லியனுக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழலில்தான் பொருளியல் ரீதியாக சிங்கப்பூரின் போட்டித்தன்மையை அதிகரிக்க அரசாங்கம் உதவுகிறது. அதே வேளையில், இணையப் பாதுகாப்பையும் பயனாளர் தரவுப் பாதுகாப்பையும் அது உறுதி செய்வதாக திருமதி டியோ சொன்னார்.
தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ்வும் கருத்தரங்கில் பேசினார்.
"இன்றைய நிலவரப்படி, மெட்டவர்ஸ் தொழில்நுட்பம் மூலம் எழக்கூடிய பிரச்சினைகளைச் சரிசெய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சட்ட திட்டங்களை எந்தவோர் அரசாங்கமும் நிறைவேற்றவில்லை.
"எனவே சிங்கப்பூரைப் பொறுத்தமட்டில், விதிமுறைகளுக்கும் புத்தாக்கத்திற்கும் இடையே சமநிலை வகுப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்," என்று திரு டான் விவரித்தார்.
தனிநபர் தரவுப் பாதுகாப்பில் கவனம் செலுத்த மென்பொருள்களைச் சோதிக்கும் தளங்கள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
விதிமுறைகளும் இணையப் பாதுகாப்பும் ஒருபுறமிருக்க, உள்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதும் முக்கியம் என்று திருமதி டியோ கூறினார். ஏனெனில், புதிய தொழில்நுட்பங்களுக்கு 5ஜி தொடர்பு தேவைப்படுகிறது.
ஆய்வு, மேம்பாட்டில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலீடு செய்யும். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு, புத்தாக்கம், வணிகம் ஆகியவற்றில் அது ஏற்கெனவே $25 பில்லியன் முதலீடு செய்துள்ளது.
முக்கியமாக, இந்த அம்சங்களில் திறனாளர்களை அது உருவாக்க வேண்டும்.
"கூடுதலான சிங்கப்பூரர்கள் மின்னிலக்கத் தளங்களில் ஏற்படுத்தப்படும் வாய்ப்புகளைப் பெற, எங்களது திறன் வளர்ச்சித் திட்டங்கள் மேம்படுத்தப்படும்," என்று திருமதி டியோ சொன்னார்.
தொழில்நுட்ப ஊழியரணி காலத்திற்கு ஏற்புடையதாக இருப்பதை உறுதி செய்ய, தொழில்துறையுடன் இணைந்து அரசாங்கம் அணுக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்பதை அவர் சுட்டினார்.

