ஆப்பிள், கூகல், மெட்டா, மைக்ரோசாஃப்ட் ஆகிய நான்கு தொழில்நுட்ப நிறுவனங்களின் பயனர் கணக்குகள் கண்காணிக்கப்படுவதைப் பொறுத்தவரை உலகில் சிங்கப்பூர் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த 'சர்ஃப்ஷார்க்' எனும் இணையப் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. 2013ல் இருந்து எட்டு ஆண்டு காலத்தில் தொழில்நுட்ப நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை இந்த ஆய்வு ஆராய்ந்தது.
நான்கு தொழில்நுட்ப நிறுவனங்களில், 100,000 குடியிருப்பாளர்களில் கோரப்படும் மொத்த பயனர் கணக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் இத்தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.
தரவரிசையில் மால்டா (1,128 கணக்குகள்) முதலிடம் பிடித்துள்ளது.
அதற்கு அடுத்த நிலைகளில் லக்ஸெம்பர்க், அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன. 6வது இடத்தைப் பிடித்த சிங்கப்பூரில், 100,000 பேரில் 452 பேரின் கணக்குகள் கோரப்பட்டன.

