சிங்கப்பூரில் சலவைத்தூள், பானங்கள் போன்ற பொருள்களை மீண்டும் நிரப்புவதற்குக் கூடுதல் தெரிவுகள் வழங்கப்பட்டால், 110,000 டன்னுக்கும் மேலான கரிம வெளியேற்றத்தைக் குறைக்க முடியும். கடந்த ஆண்டு இங்கு பொட்டலக் கழிவால் இதே அளவு கரிமம் வெளியேற்றப்பட்டது.
பொட்டலக் கழிவைக் குறைக்க, சிங்கப்பூர் சுற்றுப்புற மன்றமும் கேபிஎம்ஜி நிறுவனமும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற பரிந்துரைகளில் இவை அடங்கும். அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பொட்டலக் கழிவுகள், மறுசுழற்சி செய்யப்படும் விகிதம் குறைவு.
கடந்த ஆண்டு ஏறத்தாழ 523,000 டன் பொட்டலக் கழிவு வீசப்பட்டது. இது, கரிம வெளியேற்றத்துக்குப் பங்களித்ததாக சிங்கப்பூர் சுற்றுப்புற மன்றத்தின் தலைவர் இசபெலா ஹுவாங் லோ கூறினார். இந்த அளவு கழிவைக் கொண்டு 1,000க்கும் அதிகமான ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பிவிடலாம்.
கழிவுகள் வீசப்படுவது இதே அளவில் தொடர்ந்தால், சிங்கப்பூரின் ஒரே குப்பை நிரப்பும் நிலமான செமாக்காவ் தீவில் 2035க்குள் குப்பை நிரப்ப இடமில்லாமல் போய்விடக்கூடும்.
இந்த அறிக்கைக்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1,000க்கும் அதிகமானோர், சுற்றுப்புறத்துக்கு உகந்த பொட்டலமிடுதலுக்கு தாங்கள் ஆதரவளிப்பதாகக் கூறினர்.
எனினும், அதற்கான செலவு, அத்தகைய பொட்டலமிடுதல் குறித்து போதுமான தகவல் கிடைக்காதது போன்றவற்றால் அதற்கு ஆதரவளிப்பதில் தடை ஏற்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 65 விழுக்காட்டினர், நீடித்த நிலைத்தன்மையுடைய பொருள்களை வாங்குவதற்கும் அவற்றை மறுசுழற்சி செய்வதற்கும் அரசாங்கமும் வர்த்தகங்களும் தங்களுக்கு தகவல் அளிப்பதைச் சார்ந்திருப்பதாகக் கூறினர்.
பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாக காகிதத்துக்கு மாறுவதால் உற்பத்தி செய்யப்படும் கழிவுகள் 510,000 டன் அளவிலிருந்து 306,000 டன்னாக குறையலாம் என்பதை அறிக்கை சுட்டியது.
மறுசுழற்சி செய்யப்படக்கூடிய பொருள்களுக்கும் மேலாக, மக்கும் பொருள்களைச் சேகரிப்பதற்கான தொட்டிகளை ஏற்படுத்தித் தருவதும் முன்மொழியப்பட்டுள்ள இதர பரிந்துரைகளில் ஒன்று.