சிங்கப்பூரில் நேற்று புதிதாக 3,406 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொவிட்-19 சிகிச்சைக்காக 359 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முந்திய வாரத்துடன் ஒப்புநோக்க, இவ்விரு எண்ணிக்கையும் குறைவாகும். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை 4,909 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனைகளில் 524 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதுகுறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று வெளியிட்ட பதிவில், "ஒவ்வோர் அலையும் கடந்துசெல்லும் வேளையில், நமது சமுதாயத்தின் மீள்திறன் அதிகரித்து வருவதைக் காட்டும் மற்றொரு நம்பிக்கையளிக்கும் அறிகுறியாக இது உள்ளது," என்று குறிப்பிட்டார்.
வாரயிறுதிகளுக்குப் பிறகு பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில்தான் கொவிட்-19 தொற்று அதிகமாக பதிவாகும். ஆனால், நேற்று அது அப்படி பதிவாகவில்லை.
இந்நிலையில், இனி செல்வதற்கான பாதை குறித்து கொவிட்-19 அமைச்சுகள்நிலைப் பணிக்குழு மேல்விவரங்களை அறிவிக்கும் என்று அமைச்சர் ஓங் தெரிவித்தார்.
"இவ்வேளையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, தொடர்ந்து சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்," என்று அவர் அறிவுறுத்தினார்.
முகக்கவசம் அணிவது விரைவில் பொதுப் போக்குவரத்திலும் மருத்துவமனைகள், மருந்தகங்கள் போன்ற சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களிலும் கட்டாயமாக இருக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்து இருந்தார்.
தற்போது வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.
ஆனால், கடைத்தொகுதிகள் போன்ற உட்புறங்களில் அதை அணிவது கட்டாயமாக இருந்து வருகிறது.