சட்ட திட்டங்களை வரைவதற்கும் அவற்றைச் செயல்படுத்துவதற்கும் பல்வேறு கருத்துகள் இருப்பது மெருகூட்டும். அதே வேளையில் பலதரப்பட்ட கருத்துகள் தலைதூக்கும்போது முடங்கிப் போகும் நிலை உருவாவதை சிங்கப்பூர் தவிர்க்கவேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
பல்வேறு கருத்துகளை வரவேற்று பல கண்ணோட்டங்கள் குறித்து விவாதிக்க சிங்கப்பூர் விரும்பினாலும் முன்னோக்கி சிந்தித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் துணிச்சல் உள்ள தலைவர்களும் அதற்கு வேண்டும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்
"ஒரு முடிவெடுத்ததும் ஒன்றுபட்டு செயல்படுவதுடன் முடிவிலிருந்து மாறாமல் இயங்கவேண்டும். அனைவரும் பங்காற்றவேண்டும், நம்மை மேம்படுத்திக்கொள்ளலாமா என்பதை ஆராய அவ்வப்போது நாம் எடுத்த முடிவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும்," என்று பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் கூறினார்.
'தி சிங்கப்பூர் சிந்தசிஸ்: இனோவேஷன், இன்க்ளூஷன், இன்ஸ்பிரேஷன்' எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது திரு ஹெங் பேசினார். சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் சென்ற ஆண்டு ஜூலை மாதம் வழங்கிய நான்கு விரிவுரைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஒன்பதாவது எஸ். ஆர் நாதன் கல்விமான் பொறுப்பில் திரு மேனன் அந்த விரிவுரைகளை வழங்கினார். சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் உயர் பொறுப்பில் இருந்தாலும்கூட அவர் தனது விரிவுரைகளில் வெளிப்படையாகக் கருத்துகளை முன்வைத்தது சிலருக்கு ஆச்சரியம் தந்ததைத் திரு ஹெங் சுட்டினார்.
செல்வந்தர்களுக்கான வரியை அதிகரிப்பது, குறைந்தபட்ச சம்பள முறையை செயல்படுத்துவது குறித்து ஆராய்வது உள்ளிட்ட பரிந்துரைகளைத் திரு மேனன் தனது விரிவுரைகளில் முன்வைத்தார்.

