இர்ஷாத் முஹம்மது
தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, நடைமுறையில் உள்ள திட்டங்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்.
தங்குவிடுதியில் வசிப்போருக்குத் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்று நேற்றைய அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்கு குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான திரு வோங் இவ்வாறு பதிலளித்தார்.
கட்டுப்பாடுகள் குறித்து ஆராயப்படும் என்று கூறிய அவர், கொவிட்-19 சூழலைத் தவிர்த்து நீண்டகாலத் திட்டமாக ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் கூடுவது என்றில்லாமல் பல இடங்களில் சமமான எண்ணிக்கையில் கூடுவதற்கான வழிகள் ஆராயப்படுகின்றன என்றார்.
கொவிட்-19க்கு அப்பால், பாதுகாப்பு, கூட்ட நெரிசல் போன்ற வெவ்வேறு பிரச்சினைகளையும் களைய அது ஏதுவாக அமையும் என்றார்.
பொழுதுபோக்கு மையங்கள் உட்பட வாரயிறுதிகளில் ஊழியர்கள் தங்கள் நேரத்தைக் கழிக்க மேலும் அதிக தெரிவுகள் வழங்கப்படுவதற்கான முயற்சிகள் நடந்துவருவதாக அவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் லிட்டில் இந்தியா, ஜூரோங் ஈஸ்ட், கேலாங் சிராய், சைனாடவுன் ஆகிய நான்கு பிரபல இடங்களுக்குச் செல்வதற்கான அனுமதி பெறும் திட்டம் ஜூன் மாதம் 24ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.
அதற்குமுன் அவர்கள் சமூகத்தில் எங்குச் செல்லவேண்டுமானாலும் வெளியேறும் அனுமதி அட்டையைப் பெறவேண்டியிருந்தது.

