ஆண்டிறுதியில் மற்றொரு கொவிட்-19 அலைக்கு சிங்கப்பூர் தயாராக இருக்கவேண்டும் என்ற நிலையில், இவ்வாண்டு இறுதிக்குள் 5 முதல் 11 வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.
அதே சமயம் ஆறு மாதக் குழந்தைகள் முதல் ஐந்து வயது வரையிலான சிறார்கள் வரை கொவிட்-19 தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது குறித்து கூடிய விரைவில் பரிந்துரைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இக்குறிப்பிட்ட வயதுப் பிரிவினருக்கு 'மொடெர்னா ஸ்பைக்வாக்ஸ்' தடுப்பூசியைப் போடலாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் அனுமதி வழங்கியதை அடுத்து கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சு இதனை நேற்று தெரிவித்தது.
இந்நிலையில், கொவிட்-19க்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியை, 5 முதல் 11 வயது வரையிலான சிறார்கள் போட்டு, குறைந்தது ஐந்து மாதங்களுக்குப் பின்னர் 'ஃபைசர்-பயோஎன்டெக் / கொமிர்னாட்டி' பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்யப்படுகிறது.
இவ்வாண்டின் இறுதிக் காலாண்டில் தொடக்கப்பள்ளித் தேர்வுகள் முடியும் தருணத்தில் ஐந்து முதல் 11 வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் போடுவதற்கான ஆயத்த பணிகளில் சுகாதார அமைச்சு ஈடுபட்டு வருகிறது.
இச்சிறார்களுக்குக் குறிப்பாக பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக ஐந்து தடுப்பூசி நிலையங்கள் இயங்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். இது குறித்த மேல்விவரங்கள் பின்னாளில் அறிவிக்கப்படும்.
பிள்ளைகளின் நலன் கருதி பெற்றோர் கவலை எழுப்பும் சாத்தியம் உள்ளதால் தடுப்பூசிகள் வழங்கப்படுவது குறித்து சுகாதார அமைச்சு முன்னதாகவே தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 6,000 இளம் பிள்ளைகள் தொடர்பான ஆய்வு ஒன்றில், தடுப்பூசி போட்டுக்கொண்டதை அடுத்து இதய தசையில் வீக்கம் ஏற்பட்ட சம்பவம் ஏதும் பதிவாகவில்லை என்று பகிர்ந்துகொண்டார் திரு ஓங். அத்துடன் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட சம்பவங்களும் மிகக் குறைவு என்றார் அவர்.
கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகும் இளம் பிள்ளைகள், கடுமையாக நோய்வாய்ப்படும் அபாயம் குறைவு என்றாலும் ஐந்து வயதுக்குக் குறைவான சிறார்கள் பலருக்குக் கடும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டினார்.
அண்மைய மாதங்களில் கொவிட்-19 காரணமாக இரு இளம் பிள்ளைகள் உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில் ஆறு மாதக் குழந்தைகள் முதல் ஐந்து வயது சிறார்கள் வரையிலான பிரிவினருக்கு 'மொடெர்னா' தடுப்பூசி போடலாம் என்ற ஒப்புதல் வழங்கப்பட்டால், சிறார்களின் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்துடன் ஒரே நேரத்தில் அதே தடுப்பூசி நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.
இது பெற்றோர்களுக்கு வசதியாக இருக்கும் என்று அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

