துவாஸ் கப்பல் பட்டறையில் வேலை செய்துகொண்டிருந்தபோது கடலில் விழுந்து காணாமல்போன வெளிநாட்டு ஊழியரின் சடலம் நேற்று கண்டு பிடிக்கப்பட்டது.
கப்பல்களைக் கட்டும் தூணின் ஒரு பகுதி இடிந்ததில் அவர் கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த 38 வயது ஊழியரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் கெப்பல் கப்பல் பட்டறை அறிக்கை தெரிவித்தது.
"ஒவ்வொரு ஊழியரின் உயிரையும் பாதுகாப்பையும் மிகவும் மதிக்கிறோம். துயரமான சம்பவம் குறித்து வருந்துகிறோம்," என்றும் அது கூறியது.
சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அருகே மிதந்த சடலத்தை மீட்க அதிகாரிகள் உதவி வருவதாக நேற்று மதியம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
குமரன் மரின் என்ற நிறுவனத் தில் அந்த ஊழியர் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாக மனிதவள அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.
சென்ற திங்கள்கிழமை காலை 10.40 மணியளவில் கப்பல்களைக் கட்டும் இடத்தில் ஊழியர் இருந்தபோது பாரந்தூக்கி சாய்ந்து விபத்து நேர்ந்தது. இதனால் நிலைதடுமாறி கடலில் விழுந்த அவர் காணாமல் போனார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை அவரைத் தேடி மீட்கும் பணியில் இறங்கியது.
இந்த விபத்தில் 29, 31 வயதில் இருந்த இரண்டு பங்ளாதேஷ் ஊழியர்களும் 48 வயது சீன நாட்டவரும் 40 வயது சிங்கப்பூர் ஒருவரும் சிறு காயத்துடன் தப்பினர். நால் வரின் நிலைமை சீராக உள்ளது.

