திவ்யாதாக்ஷாய்னி
தரமான செய்திகளை வழங்க சரியான பண்புநலன்களுடனான திறன்மிக்கவர்கள் தேவை என்றும் அவர்களைப் பணியமர்த்தவும் தக்கவைக்கவும் ஆற்றல் இருக்கவேண்டும் என்று எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் தலைவர் கோ பூன் வான் கூறியுள்ளார்.
எஸ்பிஎச் மீடியாவும் எஸ்பிஎச் அறநிறுவனமும் இணைந்து நேற்று நடத்திய உபகாரச் சம்பளம் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய திரு கோ, நாம் நம் நோக்கத்தில் கவனமாக இருப்பதை சக ஊழியர்களுக்கும் வாசகர்களுக்கும் தெரிவிக்கும் வண்ணம் கூடுதல் தொகையுடன் உபகாரச் சம்பளங்கள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
எஸ்பிஎச் மீடியா நியூஸ் சென் டர் அரங்கில் நடைபெற்ற விழாவில் 38 பேர் மூன்று வெவ்வேறுப் பிரிவுகளில் உபகாரச் சம்பளங்களைப் பெற்றனர்.
அவர்களில் 12 பேர் எஸ்பிஎச் மீடியா செய்தித்துறை உபகார சம்பளத்தையும் 14 பேர் எஸ்பிஎச் ஊழியர்களின் பிள்ளைகளுக்கான உபகாரச் சம்பளத்தையும் பெற்றனர். 12 பேருக்கு எஸ்பிஎச் அறநிறுவனத்தின் "லிம் கிம் சான்" நினைவு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.
தமிழ் முரசுக்கான முதல் உபகாரச் சம்பளத்தைப் பெற்றார் ரெட்டி கண்ணன் யுகேஷ், 21.
"தமிழ் முரசு செய்தியாளருக்கென முதல் உபகாரச் சம்பளத்தை வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திறன்மிக்க செய்தியாளர்கள் மூலம் தரமான செய்திகளை வழங்குவது எங்கள் நோக்கம்.
"எதிர்காலத்தில் இன்னும் அதிகமானோர் உபகாரச் சம்பளம் பெற்று தமிழ் முரசில் பணியாற்ற முன் வருவார்கள் என்று நம்புகிறேன்," என்று கூறினார் தமிழ் முரசின் ஆசிரியர் ஜெ. ராஜேந்திரன்.
இந்த ஆண்டு, எஸ்பிஎச் மீடியா செய்தித்துறை உபகாரச் சம்பளத்திற்கு மொத்தம் 126 விண்ணப்பங்கள் வந்தன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது மும்மடங்கு அதிகம்.
பல நேர்காணல்கள், தேர்வுகள், வேலைப்பயிற்சி, வேலைப்பயற்சி மதிப்பீடு ஆகியவற்றுக்குப் பிறகு 12 மாணவர்களுக்கு மட்டுமே எஸ்பிஎச் மீடியா செய்தித்துறை உபகார சம்பளம் வழங்கப்பட்டது.
எஸ்பிஎச் அறக்கட்டளையின் 'லிம் கிம் சான்' விருதைப் பெற்ற முவாமினா, 23, தன் தாயாரால் தன்னுடைய கல்விச் செலவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனால் இந்த உபகாரச் சம்பளம் தன் படிப்புச் செலவுக்கு மிகவும் கைகொடுக்கும் என்று கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் முரசில் மாணவச் செய்தியாளராக அவர் பணியாற்றினார்.
அதே விருதைப் பெற்ற மற்றொருவரான நூருல் ஜெஸிமா, ஓராண்டு இடைவேளைக்குப் பிறகு பல்கலைக்கழகத்திற்கு செல்வதால் கல்விக் கட்டணத்தை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்ததாகவும் இந்த விருதைப் பெற்றது தனக்கு மனநிம்மதியை அளிப்பதாகவும் கூறினார்.

