இவ்வாண்டின் சிங்கப்பூர் இலக்கிய பரிசினை தமிழ் பிரிவில் மூன்று பெண் எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர். சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் படைப்புகளுக்காக ஈராண்டுகளுக்கு ஒரு முறை இவ்விருது வழங்கப்படுகிறது.
எழுத்தாளர் ரமா சுரேஷ் தன்னுடைய 'அம்பரம்' புத்தகத்திற்காக புதினம் பிரிவிலும், வாசகர்களின் விருப்பமான புத்தகம் பிரிவிலும் இரு விருதுகளை பெற்றார். கவிதைப் பிரிவில் கவிஞர் இன்பா தன்னுடைய 'லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்' கவிதைத் தொகுப்பிற்காகவும் புத்தாக்க இலக்கியப் புதினம் அல்லாதவை பிரிவில் எழுத்தாளர் அழகுநிலா தன்னுடைய 'மொழிவழிக் கனவு' புத்தகத்திற்காகவும் விருதுகளைப் பெற்றனர்.
"எழுதுவது மாயாஜாலத்தைப் போன்றது. அதற்கென ஒரு புது உலகத்தில் புதிய காலத்தில் புதிய மனிதராக வாழ்ந்து எழுதவேண்டும்," என்று ரமா சுரேஷ் கூறினார்.
"இந்த வெற்றி கிரீடமல்ல,
பொறுப்பும் சுமையும் அதிகமாகிறது.
மேலும் தீவிரமாக இயங்குவதற்கான ஊக்க சக்தியாக இருக்குமென நம்புகிறேன்," என்று இன்பா சொன்னார்.
சிங்கப்பூர் குடிமக்களுக்காவும் நிரந்தரவாசிகளுக்காகவும் நடத்தப்படும் இப்போட்டியில் விருது பெரும் ஒவ்வொரு வெற்றியாளருக்கும் தலா 3,000 வெள்ளி ரொக்கப் பரிசும் கூடுதலாக சிறப்பு விருதும் வழங்கப்பட்டன. கவிதை, புதினம் மற்றும் புத்தாக்க இலக்கியப் புதினம் அல்லாதவை ஆகிய பிரிவுகளில் ஒவ்வொரு மொழிக்கும் தலா ஒரு பரிசு வீதம் மொத்தம் 12 பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் ஒவ்வொரு மொழியிலும் வாசகர்களின் விருப்பப் புத்தகம் ஒன்றிற்கு பொதுமக்களின் வாக்களிப்பு மூலம் ஒரு பரிசும் வழங்கப்பட்டது.
இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் சிறப்பு விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டார்.
இப்போட்டியில் தமிழ்மொழியின் கவிதைப் பிரிவிற்கு முதன்மை நடுவராக இருந்த கல்வி அமைச்சின் மூத்த பாடக்கலைத்திட்ட வரைவு அதிகாரியான திருமதி இரத்தினமாலா பரிமளம், 60, "சிங்கப்பூரின் கவிதை உலகை தெரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. கவிதைகளின் பாடுபொருள், வடிவம், புதிய சொற்களின் பயன்பாடுகள், வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகள் ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூர் கவிஞர்களின் தரத்தை உணர முடிந்தது. சிங்கப்பூர் வாழ்வியலை தங்கள் படைப்புகள் வழி தத்ரூபமாக கண்முன் நிறுத்தினர்," என்று கூறினார்.
"இவ்வாண்டில் இறுதிப்பட்டியலுக்குத் தேர்வுசெய்யப்பட்ட படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறந்து விளங்கியதால் அவற்றுள் வெற்றிப்படைப்பை மதிப்பீடு செய்து கண்டடைவது நீதிபதிகள் குழுவுக்குப் பெரும் சவாலாக இருந்தது. போட்டி, வெற்றி இவை ஒருபக்கம் இருந்தாலும் புதினம் அல்லாத படைப்புகளின் தரம் சிங்கப்பூரில் தொடர்ந்து கூடிக்கொண்டே போவதை இலக்கியப் பரிசுப் போட்டிக்கு வந்திருந்த நூல்கள் காட்டின," என்று கூறினார் புதினம் அல்லாத படைப்புப் பிரிவின் தலைமை நடுவரான பொறியாளர் சிவானந்தம் நீலகண்டன், 42.
புதினங்களுக்கான பிரிவில் முதன்மை நடுவராக இருந்த எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ், "சிங்கப்பூரில் இயங்கும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புலகை அறிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது.
"இம்முறை தேர்வுக்காக வந்த படைப்புகள் சிங்கப்பூரில் இயங்கும் தமிழ் எழுத்தாளர்கள் நவீன தமிழ் மற்றும் உலகத் தமிழ் இலக்கியங்களின் செல்வழிகளோடு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பரிச்சயத்தைக் காட்டின. சிங்கப்பூர் என்னும் தனித்துவமான நிலத்தைச் சார்ந்த இலக்கியத்தைப் படைக்கிறோம் என்ற எண்ணம் நம் எழுத்தாளர்களிடையே குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்துள்ளது. சிங்கப்பூரில் மேலும் இத்தகைய படைப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றிருக்கிறது," என்று தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
மோனலிசா