'டிபா' எனப்படும் மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவத்தில் சேர்ந்துகொள்ள கனடாவின் விண்ணப்பத்தை அதிகாரபூர்வமாக ஆராயும் நடவடிக்கையை சிங்கப்பூர், சிலி, நியூசிலாந்து ஆகிய நாடுகள் மேற்கொள்ளவிருக்கின்றன. இந்த மூன்று நாடுகளும் பங்காளித்துவத்தின் உறுப்பு நாடுகள்.
மின்னிலக்க பொருளியல் பங்காளித்துவத்தில் சேர்ந்துகொள்ள கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதியன்று கனடா விண்ணப்பம் செய்தது. 2020ஆம் ஆண்டு டிசம்பம் மாதம் இந்த பங்காளித்துவம் நடப்புக்கு வந்தது. அதன் மூலம் உறுப்பு நாடுகளுக்கிடையே மின்னிலக்க வர்த்தகத்தின் தொடர்பில் புதிய அணுகுமுறைகள் உள்ளிட்டவை வரையப்பட்டன.
பங்காளித்துவம் கனடாவின் விண்ணப்பத்தை ஆராயும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு, தொடர்பு, தகவல் அமைச்சு, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவை நேற்று இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மின்னிலக்க பொருளியல் பங்காளித்துவத்தில் உறுப்பு நாடுகளின் அரசாங்கங்களைப் பிரதிநிதிக்கும் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவத்தில் சேர்ந்துகொள்ள கனடா விண்ணப்பம்

