'பாரதி ஏர்டெல்'லில் தான் வைத்திருக்கும் பங்குகளில் 3.3 விழுக்காட்டை விற்கப்போவதாக சிங்டெல் அறிவித்துள்ளது. பங்குகளை 2.25 பில்லியன் வெள்ளிக்கு விற்கத் தான் ஒப்புக்கொண்டுள்ளதாக சிங்கப்பூரின் தொலைத் தொடர்பு நிறுவனமான சிங்டெல் தெரிவித்தது.
5ஜி கட்டமைப்புக்கும் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் நிதி திரட்ட இவ்வாறு செய்வதாக சிங்டெல் கூறியது.
சிங்டெல், இந்தியாவின் 'பாரதி என்டர்பிரைசஸ்' ஆகியவை இணைந்து நடத்தும் நிறுவனம் 'பாரதி டெலிகாம்'. 3.3 விழுக்காட்டுப் பங்குகளை 'பாரதி டெலிகாம்' நிறுவனத்திடம் விற்பதன் மூலம் 600 மில்லியன் வெள்ளி லாபம் ஈட்டப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக சிங்டெல் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
இதைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக 29.7 விழுக்காட்டு 'ஏர்டெல்' பங்குகளை சிங்டெல் வைத்திருக்கும். இந்த அறிவிப்பிற்குப் பிறகு நேற்று முன்தினம் சிங்டெல்லின் பங்கு விலை 1.9 விழுக்காடு கூடியது.