கடந்த 14-ஆம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட ஆலிவ் பச்சை நிற பீங்கான் பொருள்கள் ஃபோர்ட் கேனிங் பூங்காவில் புதிதாக திறக்கப்பட்ட மரபுடைமை மற்றும் மணமூட்டிகள் (spices) காட்சிக் கூடத்தின் முக்கிய அம்சங்களாகத் திகழ்கின்றன.
கடந்த 2018, 2019ஆம் ஆண்டு களில் அங்கு மேற்கொண்ட
அகழாய்வுப் பணிகளின்போது
கண்டுபிடிக்கப்பட்ட அந்தப் பொருள்கள் சிங்கப்பூரின் வரலாற்றை 700 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிக் கொண்டு செல்கிறது. தேசிய பூங்காக் கழகம் ஃபோர்ட் கேனிங் பூங்காவில் நேற்று திறந்த மரபுடைமைக்
காட்சிக்கூடம் ஃபோர்ட் கேனிங் நிலையத்தின் இரு மாடிகளின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. அந்த நிலையம் கடந்த 1926ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவ முகாமாகப் பயன்படுத்தப்பட்டது.
தேசிய பூங்காக் கழகம் 350 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மணமூட்டிகள் தோட்டத்தையும் நேற்று திறந்து வைத்தது.
மரபுடைமை காட்சிக்கூடம் ஃபோர்ட் கேனிங் மலையின் வரலாற்றுச் சிறப்பையும் சிங்கப்பூரின் கதையில் குறிப்பாக 14ஆம் நூற்றாண்டிலிருந்து ஆற்றிய முக்கிய பங்கையும் எடுத்துரைக்கிறது என்று நேற்று காட்சிக்கூட திறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ குறிப்பிட்டார்.
ஃபோர்ட் கேனிங் வட்டாரத்தின் வரலாற்றையும் 2019ஆம் ஆண்டு அங்கு திறக்கப்பட்ட 9 பூங்காக்கள் பற்றியும் விளக்கும் ஒரு புத்தகத்தையும் அமைச்சர் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
வரும் செப்டம்பர் 4 வரை தேசிய பூங்காக் கழகம் ஃபோர்ட் கேனிங் பூங்காவில் விழா ஒன்றை நடத்துகிறது. குறிப்பாக சிறார்களுக்கான திரைப்படங்களும் இலவசமாகக் கலந்துகொள்ளும் நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

