சம்பளம் மற்றும் வேலை தொடர்பான தனது வருடாந்திர வழிகாட்டிகளை உருவாக்க தேசிய சம்பள மன்றம் வரும் செப்டம்பர் முதல் தேதி கூடவிருக்கிறது. கடந்த ஆண்டின் பொருளியல் மீட்புநிலை, எதிர்கால உலக பொருளியல் நிலையின்மை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மன்றம் வழிகாட்டிகளை உருவாக்கும்.
இவ்வாண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான சம்பள, வேலையிட வழிகாட்டிகள் அக்டோபர் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.
குறைந்த வருமான ஊழியர்
களுக்கான படிப்படியாக உயரும் சம்பள முறை பற்றியும் மன்றம் ஆலோசிக்கும். கடந்த 2012ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட படிப்படியாக உயரும் சம்பள முறை வெவ்வேறு திறன்களைக் கொண்ட ஊழியர்
களுக்கான குறைந்த பட்ச சம்பளம், பயிற்சிகள் ஆகியவற்றை வரையறுக்கிறது.
அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி நடப்புக்கு வரும் நிர்வாகத்துறையில் பணிபுரிவோர், ஓட்டுநர் ஆகியோருக்கான படிப்படியாக உயரும் சம்பளமுறையும் பரிசீலிக்கப்படும்.
கடந்த ஆண்டு குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கான முத்தரப்பு பணிக்குழுவின் பரிந்துரைகள் வழிகாட்டிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
உதாரணத்திற்கு கடந்த ஆண்டின் வழிகாட்டிகளில் $2,000 வரை சம்பளம் பெறும் குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளம் $70 முதல் $90 வரை அல்லது 4.5% முதல் 7.5% வரை உயரவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
படிப்படியாக உயரும் சம்பள முறை, சில்லறை வர்த்தகம், உணவு சேவைகள், கழிவு நிர்வாகத் துறை போன்ற மேலும் பல துறைகளையும் உள்ளடக்கும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் கடந்த ஆண்டு அறிவித்தார்.
நிர்வாக ஊழியர்கள், அனைத்துத்துறை வாகன ஓட்டுநர்கள் போன்றவர்கள் இதனால் பயனடைவார்கள்.
தற்போதைய நிச்ச்சயமற்ற உலக அரசியல் சூழல், அதிகரித்து வரும் வர்த்தகச் செலவுகள், வாழ்க்கைச் செலவினம் ஆகியவற்றுக்கு மத்தி யில் உற்பத்தித் திறன் அதிகரிப்பை மையமாகக் கொள்ளக்கூடிய சம்பள உயர்வுக்கு ஆதரவு கொடுக்க வர்த்தக ஊழியர் அணி மாற்றங்
களையும் நாம் மேற்கொள்ளவேண்டும் என்றும் தேசிய சம்பள மன்றத் தலைவர் பீட்டர் சியா கூறினார்.
பொதுமக்களும் சம்பளம் தொடர்பான தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். வரும் செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இணையம்வழி சமர்ப்பிக்கலாம்.

