தொழில்நுட்ப
நிறுவனங்கள்
அமெரிக்காவையும் சீனாவையும்
கூட்டாக உழைக்கச் சொல்ல வேண்டும் என அறிவுறுத்தும் பேராசிரியர் கிஷோர்
மெஹ்புபாணி
அமெரிக்காவும் சீனாவும் தங்கள் பகைமையை நிறுத்திவிட்டு பருவநிலை மாற்றம் போன்ற உலக விவகாரங்களில் கூட்டாக உழைக்கவேண்டும் என்று தொழில்நுட்ப நிறுவனங்கள் இரு நாடுகளுக்கும் அறிவுறுத்தவேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசதந்திரி கிஷோர் மெஹ்புபாணி கூறியிருக்கிறார்.
இந்த அரசியல் போட்டித்தன்மை இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கப்போவதில்லை என்றும் இந்த வேளையில் பொதுவான சவால்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இரு நாடுகளும் குறிப்பாக தங்களின் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதால் மற்ற நாடுகள் ஏதாவது ஒரு நாட்டைச் சார்ந்த தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுக்கும்
நிர்பந்தத்துக்கு ஆளாகும் என்று அவர் விளக்கினார்.
டெக்3 தொழில்நுட்ப மாநாட்டில் நேற்று பேசிய பேராசிரியர்
மெஹ்பாணி வரும் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கடி மோசமாகும் என்றும் சொன்னார்.
சிங்கப்பூர் கணினி மன்றமும் தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ வர்த்தகங்களும் நாடுகளும் வெவ்வேறு கட்டமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் சூழல் ஏற்படும் அபாயம் குறித்து தமது உரையில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் மின்னிலக்க எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையால் மின்னிலக்க இணைப்பை மேம்படுத்தி பொருளியல் போட்டித்தன்மையை வலுப்படுத்த நாட்டின் 5ஜி கட்டமைப்பில் கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் கூறினார். தற்போது சிங்கப்பூரின் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவைகளை வெளிப்புறங்களில் 50 விழுக்காட்டு இடங்களில் கிடைக்க வகை செய்துள்ளன என்று அவர் சுட்டினார்.
தரவு புத்தாக்கத்துக்கு வழி
வகுக்க சிங்கப்பூர் வட்டார ரீதியிலும் உலக ரீதியிலும் தொடர்ந்து பங்காளித்துவத்தை ஏற்படுத்தி வருகிறது என்ற அவர், நாடுகளுக்கு இடையிலான தரவுகள் தடை இல்லாமல் பகிர்ந்து
கொள்ளப்படுவதற்கு இந்த கூட்டுறவுகள் வகை செய்யும் என்றும் சொன்னார்.
''ஆனால் தற்போது வர்த்தகங்கள் வெவ்வேறு தரவு கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதில் சவால்களை எதிர்நோக்குகின்றன,'' என்று அமைச்சர் டியோ கூறினார்.
சில நாடுகள் அதிகமான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன என்றும் அவை பொதுமக்களிடையே எதிர்மறையான பொருளியல், சமூக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.

