மூத்த ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் திறன்பேசி களையும் இணைய வங்கிச் சேவைகளையும் காணொளி அழைப்புகளையும் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் மின்னிலக்கமயமாகி வரும் வேலை இடங்களிலும் அவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளலாம் என்று கூறினார் டிபிஎஸ் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி திரு பியுஷ் குப்தா(படம்).
கடந்த சில ஆண்டுகளாக பல மூத்த ஊழியர்கள் இவ்வாறு செய்து வந்துள்ளனர்வந்துள்ளனர் என்றும் அவர் சுட்டினார்.
''உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ள முடியும் என்றால் உங்களால் உங்கள் தொழிற்துறை வாழ்க்கையிலும் மாற முடியாது என்று எப்படி எங்களால் எண்ண முடியும்?'' என்றார் திரு குப்தா.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நன்யாங் வர்த்தகப் பள்ளியின் சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராகக் கலந்துகொண்டார் திரு குப்தா.
கிட்டத்தட்ட 1,000 பேர் நேரடியாகவும் இணையத்திலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பலதரப்பட்ட அம்சங்களைப் பற்றி திரு குப்தா பேசினார்.
அதில் கேள்வி பதில் அங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
புதிய திறன்களை எளிதில் கற்றுக்கொள்ள நிறுவனங்கள் வகை செய்யாததால்தான் மூத்த ஊழியர்கள் புதிய தொழில்
நுட்பத்தை வேலையிடங்களில் பயன்படுத்த சிரமப்படுகிறார்கள் என்றும் அந்தப் பொறுப்பு நிறுவனங்களுடையது என்றும் திரு குப்தா குறிப்பிட்டார்.
டிபிஎஸ் நிறுவனத்திற்கு இது நன்கு புரியும் என்று கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அவ்வங்கியின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் திரு குப்தா விளக்கினார். உதாரணத்திற்கு தங்கள் வங்கிக் கிளைகளிலும் தொலைபேசி அழைப்பு நிலையங்களிலும் அதிகரித்துவரும் தானியக்கமயமாதலால் கிட்டத்தட்ட 1,600 வேலைகள் நான்கு ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும் என்பதை 2016ஆம் ஆண்டு வங்கி உணர்ந்தது.
அப்போது தொழிற்சங்கங்களுடைன் இணைந்து திறன்களை வளர்த்துக்கொள்ள கடப்பாடு கொண்ட 1,600 பேருக்கும் பயிற்சிகளைக் கொடுக்க வங்கி உறுதி அளித்தது என்றார் 62 வயது திரு குப்தா.
கிட்டத்தட்ட 400 பேர் தங்கள் வேலைகளை விட்டு விலகினர். மீதமுள்ள 1,200 பேரில் 1,000க்கும் மேற்பட்டோர் மறுபயிற்சி பெற்ற பிறகு வங்கியிலேயே வேறு சில பொறுப்புகளை ஏற்றனர் என்று திரு பியுஷ் குப்தா விவரித்தார்.

