நீண்டகால உறவை மறுஉறுதி செய்துகொண்ட சிங்கப்பூர், புருணை
சுல்தான் போல்கியா நேற்றுமுன்தினம் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்துப் பேசினார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு
தங்களுக்கு இடையே உள்ள சிறப்பான, நீண்டகால உறவை சிங்கப்பூரும் புருணையும் மறு உறுதி செய்துகொண்டன. சிங்கப்பூர் வந்திருந்த புருணை சுல்தான் ஹசனல் போல்கியா தனது இருநாள் பயணத்தை நேற்று முன்தினம் முடித்துக்கொண்டார்.
அவரது வருகையின்போது இரு நாடுகளுக்கிடையே எரிபொருள், பசுமைப் பொருளியல், உணவு, மருத்துவ பொருள் விநியோகம் உள்ளிட்ட துறைகளில்
ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிகள் பற்றி கலந்துரையாடப்பட்டது என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
சுல்தான் போல்கியா நேற்று முன்தினம் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்துப் பேசினார்.
சுல்தான் போல்கியாவின் 76ஆவது பிறந்தநாள்
விழாவில் சில வாரங்களுக்கு முன்னால் அவரைக் கடைசியாகச் சந்தித்ததாகவும் நேற்று அவரை மீண்டும் சந்தித்து இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்திக்கொண்டதில் மகிழ்ச்சி என்றும் பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இரு நாடுகளும் மொத்தம் நான்கு பரிந்துணர்வு
ஒப்பந்தங்களில் முன்னதாகக் கையெழுத்திட்டன.
பொதுச் சேவையை மேம்படுத்தும் ஒரு ஒப்பந்தம்
புருணையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் சிங்கப்பூர் அமைச்சுகளிலும் அரசு சார் ஆணையங்களிலும் இணைந்து பயிற்சி பெற வழி வகுக்கும்.
இரு நாடுகளுக்கும் இடையே பொருளியல் ஒத்துழைப்பு நீண்டகாலமாக தொடர்கிறது. புருணை உடனான சிங்கப்பூரின் வர்த்தகம் 2020லிருந்து 24 விழுக்காடு
அதிகரித்து 2021ல் 2.7 பில்லியன் வெள்ளியை
எட்டியுள்ளது.
சிங்கப்பூரில் 16வது குரங்கம்மை தொற்றுச் சம்பவம்
சிங்கப்பூரில் மேலும் ஒரு குரங்கம்மை தொற்றுச் சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் 16 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார அமைச்சு வாரந்தோறும் அதன் இணையத்தளத்தில் வெளியிடும் குரங்கம்மை தொற்றுச் சம்பவங்கள் அறிக்கையில் இந்த ஆக அண்மைய சம்பவம் பதிவுசெய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 14 அன்று தொடங்கிய வாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு தொற்று ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
குரங்கம்மை தொற்று குறித்த சுகாதார அமைச்சு ஆகக் கடைசி தகவலை ஆகஸ்ட் 5 அன்று வெளியிட்டது. இதில் சிங்கப்பூரின் 14வது, 15வது சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
இதோடு பாதிக்கப்பட்ட ஒருவர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. சமூகத்தொற்றுக்கு ஆளானவர் 54 வயதான ஆடவர் என்றும் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட 13வது நபருடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
சிங்கப்பூர் உற்பதித்துறை 0.6% வளர்ச்சி கண்டது
சிங்கப்பூரின் உற்பத்தித்துறை ஆண்டு அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் 0.6 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. மின்னியல் மற்றும் உயிரியல் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவினால் இந்த மிதமான வளர்ச்சி என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.
புளூம்பர்க் கருத்துக்கணிப்பில் ஜூலை மாதத்தில் 5.3% வளர்ச்சி ஏற்படும் என பொருளியல் நிபுணர்கள் முன்னதாக கணித்தனர்.
உயிரியல் மருத்துவ உற்பத்தியைத் தவிர்த்து மற்ற துறைகளில் 2.9 விழுக்காடு வளர்ச்சி பதிவானது.
மின்னியல் துறை கடந்த மாதம் 6.3% குறைந்தது.

